Monday, August 22, 2005

அஸ்ஸாம் அனுபவங்கள்

இந்தியாவின் வடகிழக்கிலுள்ள ஏழு சகோதரிகளில் மூத்தவள்தான் அஸ்ஸாம்.
கௌஹாத்தியிலிருந்து கோலாகாட் செல்லும் வழியில் நுமாலிகார் எண்ணை
சுத்திகரிப்பு ஆலை உள்ளது. அனைத்து அஸ்ஸாம் மாண்வர்கள் சங்கமும் (AASU),
ராஜீவ் காந்தியும் செய்து கொண்ட ஒப்பந்ததின் அடிப்படையில் உருவானதால்
"ஒப்பந்த ஆலை" (Accord Refinery) என்ற பெயருமுண்டு இதற்கு. பார்
புகழும் பாரத் பெட்ரோலியம் கார்ப்போரேஷனின் கூட்டு முயற்சிதான் இந்த
நிறுவனம். இங்குதான் எங்களுக்கு ப்ரோஜெக்ட்.

ஹரியும் நானும் சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு 'ஜெட்'டில் பயணித்து,
பின்னர் அங்கிருந்து "இண்டியன் ஏர்" பிடித்து, கௌஹாத்திக்கு பயணித்து,
கோலாகாட்டிற்கு காரில் சென்றோம். கோலாகாட், கௌஹாத்தியிலிருந்து
12 மணி நேரம். எனவே அங்கு போய்ச் சேர காலை மணி ஆறு ஆகி விட்டது.
இப்பொது நுமாலிகார் செல்ல, மீண்டும் வந்த வழியே 2 மணி பயணிக்க
வேண்டும். அகால வேளை பாதுகாப்பு கருதி இந்த ஏற்பாடு.

இப்போது எங்கள் பயணம் டாக்சி மூலம். டிரைவர் பெயர் எதேனும் ஒரு "பரூவா"
வாகவோ, அல்லது "போரா" வாகவோகத்தான் இருக்க வேண்டும், என்றெண்ணிப்
பெயர் கேட்டேன். நான் நினைத்தது சரிதான். அவர் பெயர் பரூவாதான். இது
இரண்டு மணி நேரப் பயணம் என்றாலும், இந்த டாக்சியில் சொல்லத்தக்க
அம்சங்கள் பல இருந்தன. பின் சீட்டில் இருவரும் உட்கார்ந்தோம். என்னுடைய முன்
சீட்டில், அதாவது டிரைவர் சீட்டின் மறுபுறம் ஆதாரம் ஏதுவுமில்லாமல்
தொங்கிக் கொண்டிருந்த சீட்டின் அடியில், ஆறு செங்கற்கள் அடுக்கப்பட்டிருந்தன.
அந்தச் செங்கற்கள் ஏதேனும் காலில் விழுந்து விடுமோ என்றெண்ணிப் பயந்து
கொண்டிருக்கும் போது. சடேறென்று ப்ரேக் அடித்தார், டிரைவர். ப்ரேக்
அடித்தவுடன், ஏர் பேக் (air bag) போல உடனே, முன் சீட்டின் பின்
புறத்திலிருந்து நான்கைந்து ஸ்பிரிங்குகள், தேங்காய் நார் சகிதம் வந்து
எட்டிப் பார்த்து, ஹலோ என்றன. ஸ்பிரிங்குகளைக் கையால் பிடித்துக் கொண்டே
பயணத்தைத் தொடர்த்தோம்.

சிறிது நேரத்தில் மழை தூரத் தொடங்கியது. வைப்பர் என்று சொல்லப்படும்
உதிரிப் பாகம் வேலை செய்ய மறுத்ததால், இந்தப் பரூவா, இடது கையால்
ஸ்டீயரிங்கைப் பிடித்துக் கொண்டே, வண்டியை லாவகமாக ஓட்டிக் கொண்டு,
வலது கையால் ஒரு துணியை எடுத்து, கையை காரின் வெளியே விட்டு,
கண்ணாடியைத் துடைத்துத் தன் திறமைதனை வெளிப்படுத்தினார். இன்னம் சிறிது
நேரத்தில், காரின் குறுக்கே ஒர் ஆட்டு மந்தை குறுக்கிட்டது. டிரைவர்
இப்போது ஹார்ன் அடிக்கப் போகின்றார் என்று எதிர் பார்த்தோம். ஆனால்
மாறாக, அவர் டேஷ் போர்டிலிருந்து ஒரு பச்சை நிற வயரையும், வலது
புறமிருந்து ஒரு மஞ்சள் நிற வயரையும் இழுத்தார். இரண்டு முனைகளையும்
இணைத்துப் பிடித்தார். ஒரு சிறு தீப்பொறியுடன் ஹார்ன் சப்தம் அழகாகக்
கேட்க, ஆட்டு மந்தை வழி விட்டது. அந்தக் கற்காலக் காரை எண்ணிப்
புலம்பிக் கொண்டிருக்காமல், ஒரே ட்ரிப்பில் 350 ரூபாய் கறந்த பரூவா
சாகிப்பின் விடா முயற்சியையும், நம்பிக்கையையும் எண்ணி வியக்காமலிருக்க
முடியவில்லை.

நுமாலிகார் ஆலை அமைந்துள்ள இடம் ஓர் அற்புதமான ஆக்சிஜன் ஆலைக்கு நடுவே.
ஆம், தூய்மையான, சில்லென்ற காற்று சுற்றிலுமிருந்த பச்சைப் பசேலென்ற
தேயிலைத் தோட்டங்களிலிருந்து வந்து கொண்டிருந்தது. டவுன்ஷிப் இருப்பது
ஆலையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தள்ளி, ஒரு குன்றின் மேலே. குன்றின்
மேலமைக்கப்பட்ட இந்த டவுன்ஷிப் அமைத்த கட்டுமானக் கம்பெனி, இந்தப்
ப்ரொஜெக்ட்டிற்காக தேசிய விருது வாங்கியுள்ளது என்று கேட்ட போது
ஆச்சரியம் ஏற்படவில்லை. அவ்வளவு அழகு. இந்த முதல் விஜயத்தில் எங்கள்
வேலை மூன்றே நாட்களில் முடிந்து விட, தற்காலிமாக "டாட்டா, பை பை"
சொல்லி விட்டுத் திரும்பி வந்தோம்.

கிட்டத்தட்ட பத்து மாதங்கள் கழிந்தபின், எடுத்துக் கொண்ட ப்ரொஜெக்ட்டை
முடிக்க இம்முறை மீண்டும் வந்தோம் அஸ்ஸாமுக்கு. இம்முறை
கொல்கத்தாவிலிருந்து, ஜோர்ஹாட்டிற்க்கு விமானம் மூலம் வந்து, பின் ஒரு
மணி நேரம் பயணித்து நுமாலிகார் அடைந்தோம். இப்பொது விருந்தினர்
விடுதியும் கட்டி முடிக்கப்பட்டிருந்தது. இந்தியாவிலேயெ முதன் முறையாக ஒர்
பட்டாம்பூச்சிப் பூங்காவும் அமைக்கப் பெற்றிருந்தது என்றும் கேள்விப்பட்டோம்.

விருந்தினர் விடுதி நன்றாகவே இருந்தது. கான்டீனில் சாப்பிட்டு விட்டு,
காலையில் வேலைக்குச் செல்வோம். திரும்புவதற்கு இரவு மணி ஒன்பது
ஆகிவிடும். நாங்கள் வந்த மறு நாள், விடுதி திரும்பிய போது, அறையின்
கதவில் அறிவிப்பு ஒன்று ஒட்டப்பட்டிருந்தது.

அந்த நோட்டீஸ் டவுன்ஷிப் மேனெஜரால் கையெழுத்திடப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது.
அதிலிருந்த வாசகம் வருமாறு.

"நேற்றிரவு காட்டு யானை ஒன்று டவுன்ஷிப்பிற்குள் வந்து விட்டதாக
நம்பப்படுகிறது. அந்தக் காட்டு யானையைப் பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு
வருகின்றன. அதுவரை, டவுன்ஷிப் வாசிகள் அனைவரும் கவனத்துடன் இருக்கும்படி
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்."

இந்த அறிவிப்பைப் படித்தவுடன் ஒரே த்ரில்லாக இருந்தது. ஊருக்கும் போன்
போட்டுச்
சொன்னதுதான் விவகாரமாகிப் போய்¦விட்டது. உடனே கிளம்பி வந்து
விடும்படி இடை விடாத வேண்டுகோளும், பத்திரமாகத் திரும்பவேண்டி,
பக்கத்துத் தெரு பிள்ளையாருக்கு அபிஷேக ஏற்பாடுகளும் நடந்தன. இரண்டு
நாட்களில் யானை பிடிபட்ட்டதாகக் கூறிய பின்புதான், வீட்டில் அமைதி
ஏற்பட்டது. அஸ்ஸாம் நண்பரொருவர், "இதற்கே இவ்வளவு அலட்டிக்
கொள்கிறாயே!. மூன்று மாதம் முன்பு, புலி ஒன்று பிடிபட்டது. காட்டிலாகா
அதிகாரிகள் வந்து மீண்டும் அதனைக் கொண்டுக்
காட்டில் கொண்டு போய் விடும் வரை, குன்றின் உச்சியில் ஒர் கூண்டில்தான்
வைத்திருந்தார்கள்.

நாங்கள் அனைவரும் போய் போய்ப் பார்த்துவிட்டு வந்தோம்", என்றார். ஓரிரு
நாட்கள் கழித்துக் காரில் ஆலைக்குச் சென்று கொண்டிருந்தோம். டிரைவர் காரை
நிறுத்தி விட்டார் திடீரென்று. என்னெவென்று கேட்டதற்கு, "அங்கே பாருங்கள்.
யானைக் கூட்டமொன்று, சாலையைக் கடக்கின்றது" என்றார். யானைக் கூட்டம்
சென்ற பின் எங்கள் சவாரியைத் தொடர்ந்தோம்.

நான் முன்னமே கூறியபடி இந்த ஆலை இருப்பது, நாகரீகமே இல்லாத ஒரு
வனப்பகுதி. எனவெ, ஒவ்வொரு முறையும் இ-மெயில் பார்க்க வேண்டுமென்றால்
ஒரு மணி நேரம் பயணம் செய்து கோலாகாட் செல்ல வெண்டும். பெரும்பாலான
நாட்கள் ப்ரௌசிங் சென்டர் உரிமையாளர், "இன்டெர்நெட் நஹி ஹை; சர்வர்
டவுன் ஹை" என்று சிரித்தபடியெ கூறுவார். கடுப்போ கடுப்புடன் திரும்ப
வேண்டியிருக்கும். இன்டெர்நெட்தான் வேலை செய்யவில்லை என்றால், டெலிபோன்
நெட்வொர்க்கும் படுத்தோ படுத்தியெடுக்கும் சூழல் அது. இது போதாதென்று,
ஆசு, உல்பா, போடோ, போன்றோர் விடுக்கும் பந்த் வேறு இருக்கும். இந்த
பந்துக்கள், சாதாரணமாக, 12, 24, 36, 48 என்று 12ஆம்
வாய்ப்பாட்டையே, ஒட்டி அமையும். 12 மணி நேர பந்த் என்றால் நாம்
அதிர்ஷ்டசாலிகள். பந்தின்போது, நம்ம ஊர் போல அலம்பல் பண்ணிக்
கொண்டிருந்தால், தோட்டாவினால் உயிர் போகும் வாய்ப்ப்புகள் அதிகம்.

அஸ்ஸாமில், இவர்கள் பேசும் ஆசாமியைத் தவிர, ஹிந்தி மற்றும் பீகாரி
பேசும் மக்கள் அதிகம். டவுன்ஷிப் தவிர, மற்ற இடங்களில் வசிப்பவர்கள்
பெரும்பாலோனோர் ஏழைகளாகவே இருக்கிறார்கள். ஆனால், ஏழையோ,
பணக்காரனோ, எல்லோரும் எதேனுமொரு கலையில் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
வாய்ப்பாட்டு, வாத்யம், கைவேலை என்று ஒவ்வொருவருக்கும் ஒரு பொழுதுபோக்கு
உள்ளது.

ஒரு வாரக் கடைசியில், ஆலையின் டிரெயினிங் ஆபீசர், எங்களை, அவளுடைய
உறவினரின் தேயிலை எஸ்டேட் ஒன்றிற்கு அழைத்துச் சென்றாள். மேகங்கள்
மறைக்கும் அந்தத் தேயிலைத் தோட்டம் மிக ரம்மியமாக இருந்தது. நாங்களும்
சில னிமிடங்கள் தேயிலை பறித்தோம். தோட்டப் புத்துணர்ச்சி கொண்ட
தேனீர் அருந்துவது அந்த சூழலுக்கு ஒர் அருமையான அனுபவம். போன்சாய் மரங்கள்
போன்ற, இந்த தேயிலை செடிகள் ஒவ்வொன்றிற்கும், வயது சுமார் நூறு
இருக்கும்.
டாடா தேயிலை எஸ்ட்டெட்கள் பல இடங்களில் இருந்தன.

அஸ்ஸாம் பற்றிக் கூறிவிட்டு, காஸிரங்கா வன சரணாலயம் பற்றிக்
கூறாமலிருக்கக் கூடாது. ஆனால் கூறவும் முடியாது என்னால். ஏனென்றால்
நான்தான், அங்கு செல்லவேயில்லயே. நேரமின்மையால் இங்கு செல்ல முடியாதது
எனக்குப் பெரிய வருத்தமே. இயற்கைச் சூழலில், யானைச் சவாரி செய்வதும்,
காண்டாமிருகங்களைப் பார்ப்பதும் அரிதான நிகழ்ச்சியல்லவா. இதே மாதிரி
வாய்ப்பு தவற விட்ட வரிசையில் புகழ்பெற்ற "காமாக்கியா" ஆலயத்தையும்
சேர்த்து கொள்ளுங்கள்.

காண்டாமிருகம்தான் பார்க்க முடியவில்லை. குறைந்தது காண்டாமிருக வடிவம்
கொண்ட ஏதெனும் ஒரு நினைவுப் பொருளாவது வாங்கிச் செல்ல வேண்டும் என்று
தீர்மானித்தோம். வழக்கமாக கார் ஓட்டி வரும் அஜீத் அன்று வரவில்லை.
வேறொரு ஒரு டாக்சி பிடித்து, 40 கிலோமீட்டர் பயணம் செய்து,
கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் ஒர் இடத்திற்குச் சென்றோம். மரத்திலான
காண்டாமிருக பொம்மை எல்லொர் கவனத்தையும் கவர்ந்தது. கிட்டத்தட்ட ஐந்து
அல்லது ஆறு கிலோ எடை கொண்ட அந்த கைவினப் பொருளின் விலை ஆயிரம்
ரூபாயாம். ஆனால் பேரம் பேசி ஐனூறு ரூபாய்க்கு
வாங்கி விட்டோம். ஐனூறு ரூபாய்க்கு இது எப்படி சாத்தியமென்று, எங்கள்
முதுகை நாங்களே தட்டிக் கொண்டோம். மறுநாள் வேலைக்கு வந்த அஜீத், இந்த
காண்டாமிருக பொம்மை, தனது வீட்டினருகே இருனூறு ரூபாய்க்குக் கிடைக்கும்
என்றான். மேலும், காண்டாமிருகம், களையாக இல்லை என்றும், மூஞ்சி, நாய்
முகம் போல உள்ளது என்றும் வெறுப்பேற்றினான். இவனக் கூட்டிக் கொண்டு போய்
வாங்கவில்லை, என்று இவனுக்கு 'ஜே' என்று ஸ்ரீகாந்த் சொன்ன போது அனைவரும்
அதனை ஆமோதித்தோம்.

இந்த அஸ்ஸாம் மக்களின் staple food, அரிசி மற்றும் பருப்பு ஆகும்.
ஆனால், பாலும், பால் சார்ந்த பொருட்களான தயிர், மோர், வெண்ணை,
நெய் போன்றவை கிடைப்பதில்லை. காபி, டீ போடக்கூட பால் பவுடர்தான்
உபயோகிக்கின்றனர். காரணம் தெரியவில்லை. பச்சைக் கடுகு கொண்டு
செய்யப்படும் சட்னி பிரபலம். அதனைச் சாப்பிட்ட பிறகுதான், மன்னிக்கவும்,
சாப்பிட முயற்சி செய்த
பின்புதான், "கடுகு சிறுத்தாலும் காரம் போகாது" எண்ற்ற பழமொழியின்
அர்த்தம் புரிந்தது.

இரண்டு மாதங்கள் தங்கிய போதும், அஸ்ஸாம் என்பது இப்படித்தான் என்று
என்னால் கூற முடியவில்லை. எனக்கு ஏற்பட்ட சிறு சிறு அனுபவங்களை மட்டுமே
தொகுத்துக் கூறியுள்ளேன்.

அறிவுரை

"எங்கடா, இந்த செல்வனைக் காணலை. இன்னிக்கும் லீவா"

"ஆமா ஸார். ஊருக்கு போயிருக்கானாம்."

எனக்குப் பலத்த கோபம் வந்தது. இது முதல் முறையல்ல. வெள்ளிக்கிழமை லீவு எடுப்பது இது

மூணாவது முறை. வெள்ளி, சனி, ஞாயிறு என்று லீவு எடுக்க இவனுக்கு என்ன ராஜா வீட்டுக் கன்னுக் குட்டின்னு நினைப்பா?.

"குமார். நீதானப்பா, அந்த செல்வனை வேலைக்குச் சேர்த்து விட்டது. அவன் எங்க இருக்கான்?"

"ஸார். இங்கதான் மல்லிப்பூ நகர்ல.."

"என்னாச்சு அவனுக்கு? ஏன் வேலைக்கு வரலை?"

"என்னமோ, வீட்ல சண்டையாம். காஞ்சீபுரம் போய்ட்டானாம்."

"சரி. சரி. வரட்டும் திங்கக் கெழம. நான் பாத்துக்கறேன்"

திங்கட் கிழமையும் வந்தது. செல்வனும் வந்தான்.

"என்னப்பா, என்ன ஆச்சு? வெள்ளிக்கிழமை வரலை.."

தலையைக் குனிந்தபடி நின்றிருந்தான்.

"வீட்ல சண்டையாமே. ஸார் கோச்சிகிட்டு, காஞ்சீபுரம் போய்ட்டீங்களாமே. உனக்கு மீறி, மீறிப் போனா என்ன வயசிருக்கும். பதினஞ்சா, பதினாறா?

நீ ஆபீஸ¤க்கு லீவு போடறது பிரச்னை இல்லை. ஆனா வீட்ல அம்மா, அப்பா மனசு எப்படிக் கஷ்டப்படும். நீ பாட்டுக்கு ஊருக்குப் போய்ட்டென்னா, நீ எங்கெ போனேன்னு அவங்களுக்கு எப்படித் தெரியும்? இரண்டு நாளா, புள்ளயக் காணோம்னு தவிச்சுப் போயிட மாட்டாங்களா?" என்று அரை மணிக்கு அறிவுரை மழை பொழிந்தேன். (வாத்தியார்னு-தண்ணிர் தண்ணீர்- வீட்ல பட்டப் பேர் கொடுத்ததுக்குத் தகுந்தாப்லே நடக்க வேண்டாமா?)

அரை மணி நேரம் காய்ச்சியும், ஒரு வார்த்தை கூடப் பேசாமல், தலையைக் குனிந்தவாறு இருந்தான்.

"சரி சரி போ. இனிமேல் இப்படியெல்லாம் பண்ணாத"

குமார் மீதுதான் கோபமாக வந்தது. அவனை அழைத்தேன்.

"என்னப்பா ஆள் சேத்திருக்கே. அரை மணி நேரம் அட்வைஸ் பண்ணறேன். வாயைத் தொறக்கக் கூட மாட்டேங்கிறான். சரியான கல்லுளிமங்கன்"

"ஸார். நீங்க சொல்றதைக் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன். அவன் காஞ்சீபுரம் போனது உண்மை. அவன் வீட்ல சண்டை நடந்ததும் உண்மை. ஆனா, சண்டை போட்டது அவன் இல்லை. அவனோட அம்மாதான், அப்பாவோட சண்டை போட்டுகிட்டு, காஞ்சீபுரம் போயிட்டாங்களாம். இவன் போயி, அம்மாவைச் சமாதானப்படுத்திக் கூட்டிகிட்டு வந்திருக்கானாம்."

"யார் போனா என்னப்பா. சொல்லாம கொள்ளாம லீவு போடறது தப்புதானே. அதனாலதான் அட்வைஸ் பண்ணினேன்"

மொழிப் பிரச்னை

மொழிப் பிரச்னை என்றவுடன் ஏதோ, தனித்தமிழ் என்றோ, வழலைக்கட்டி போன்ற கனமான விஷயங்கள் பற்றியோ பேசப் போகிறேன் என்றெண்ணி பயந்து விடாதீர்கள். இது சும்மா நம்ம அனுபவங்கள்தான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் எத்தனை மொழிகள் தெரிகின்றதோ அத்தனை நல்லது என்று தெரிந்திருந்தும், எப்படியோ மற்ற மொழிகள் கற்றுக் கொள்ளும் ஆர்வம் இல்லாமலே, ஒரு ஜென்மம் வளர்ந்து விட்டேன். இதனால் எத்தனையோ சங்கடங்கள் வந்த போதிலும், நினைவலைகளைப் புரட்டிப் பார்க்கின், சுவாரசியமாய் சில விஷயங்கள் புலப்படத்தான்
செய்கின்றது.

தாய் மொழியாம் தமிழும், ஆண்டவர்கள் மொழியாம் ஆங்கிலமும் மட்டுமே தெரிந்த எனக்கு, ஒரு முறை மும்பையில் பயிற்சி. பயிற்சி முடித்த அன்று மாலை, அணுசக்தி நகரிலிருக்கும் எனது மாமா வீட்டிற்ற்கு செல்ல எண்ணினேன். ஆட்டோவைக் கூப்பிட்ட நான், சும்மா இல்லாமல், "அணுசக்தி நகர் சலோ" என்று புலமையைக் காட்டினேன்.

ஆட்டோ டிரைவரும் என்னை சந்தோஷமாக ஏற்றிக் கொண்டான்.

"அணுசக்தி நகர் மே ரிஷ்தேதார் ஹை" என்றான் அவன்.

அவன் சொன்னது எனக்குப் புரியவில்லை. இருந்தாலும் எனது மொழி அறியாமையக்
காட்டிக் கொள்ளாமல், நானும் "ஹை.. ஹை..." என்றேன்.

"இதர் ரோட் சப் சேஞ்ச் ஹோகயா"

"ஹை..ஹை..."

இப்படியே பத்து நிமிடம் சமாளித்து குதிரை ஓட்டிக் கொண்டே வந்தேன்.

"ஆப். கித்னே தின் இதர் ரஹ்தே ஹோ?"

"ஹை..ஹை..."

அவன் சற்று நிதானித்து, "மே துஜே பூச்தே ஹை கி ஆப் கித்னே தின் இதர் ரஹ் சக்தே ஹோ" என்றான்.

சரி இனி மேலும் தாங்காது என்றெண்ணி, "மை ஹிந்தி நஹி மாலும் ஹை" என்று சரண்டர் ஆனேன்.

அவன் படேரென்று, தனது தலையில் ஓங்கி அடித்துக் கொண்டு விட்டு, "க்யார்ரே. துஜே ஹிந்தி நஹி மாலும் ஹை. ****************************************************" என்றான்.

ஆட்டோவை விட்டு இறங்கும்போது, அவன் பார்த்த பார்வை, "ஹிந்தி தெரியாத ஜென்மமே. எதற்கு இங்கு வந்தாய்" என்று கேட்பது போல் இருந்தது. ஒருவேளை, ****** யில் சொல்லியிருப்பானோ.

அடுத்த முறை, பூனா சென்றிருந்தேன். இது ஒரு வித்தியாசமான அனுபவம். பஜ்ஜியானது நானல்லவே. மாலை வேளையில், பொழுது போக, காலாற நடந்து வந்து கொண்டிருந்தேன். எனக்கு பின்னே, ஒரு பத்தடி தள்ளி, ஒரு இளம் தம்பதியினர் நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்கள் நடந்தபடியே, தமிழில் பேசிக் கொண்டு வந்தது என் காதில் துல்லியமாக விழுந்தது. எனது முகத்தை பார்க்காததால், எனது தமிழ்மூஞ்சி, அவர்களுக்குத் தெரியவில்லைபோலும். அடுத்தவர் பேச்சைக் கேட்பது அநாகரீகம் என்றாலும், பொழுதுபோக, அவர்கள் உரையாடலைக்
கேட்பது தவறில்லை என்று, என்னை நானே சமாதானம் செய்து கொண்டு, பேசுவதைக் கேட்டுக் கொண்டே நடந்தேன். மேலும், என்னை ஒரு மனிதனாக எண்ணாமல், ரோட்டில் சத்தமாக பேசி வருவது அவர்கள் தப்புதானே என்றும் எண்ணிக் கொண்டேன். அந்த மனைவியாகப்பட்டவள், கணவனிடம், தனது மாமியார் மற்றும் நாத்தனார் ஆகியோர் பற்றிப்
புலம்பியபடியே வந்தாள். அவனும், வேறு வழியின்றி, அதனை ஆமோதித்துக் கொண்டே வந்தான். சென்சார் செய்யப்பட வேண்டிய சிற்சில சிணுங்கல்கள் வேறு.

ஒரு நாலு மூலை சந்திப்பை அடைய சிறிது தூரம் இருக்கும் முன், அவர்கள் இருவரும் வேகமாக எட்டி நடந்து, என்னிடம் வந்து, "Excuse me. How to go to Venus Theatre?" என்று கேட்டனர். நானும், ஆங்கிலத்தில், "I dont know. I am new to this place" என்று
கூறியிருந்திருக்கலாம். ஆனால், நானோ, தமிழில், தெள்ளத் தெளிவாய், "எனக்குத் தெரியாது. நான் ஊருக்குப் புதுசு" என்றேன்.

அவர்கள் "ஙே" என்று விழித்தனர்.

முதன்முறையாக ப்ரான்ஸ் செல்லும் வாய்ப்பு கிடைத்தபோது, மனைவியயும் அழைத்துச் சென்றிருந்தேன். இருவரும் கிரனோப் என்னும் அழகிய ஊரில், டெம்பாலஜி என்னும் இடத்தில் தங்கியிருந்தோம். டெம்பாலஜி என்பது அப்பர்ட்மெண்ட் போல. வந்த அன்றே ஒரு வயதான பஸ் டிரைவரிடம், ஆங்கிலத்தில் வழி கேட்டு அவர்தம் கோபத்திற்கு ஆளானோம். பிரெஞ்சு
மக்களுக்கு ஆங்கிலத்தில் பேசினால் பிடிக்காது. குறிப்பாக வயசானவர்களுக்கு என்று மறுநாள் ஷாமா சொன்னாள். வெள்ளைக்காரர்கள் (foreigners) எல்லோருமே ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள் என்றெண்ணியிருந்த எங்களுக்கு இது செய்தியாகத்தான் இருந்தது.

டெம்பாலஜியிலிருந்து தினமும், ஒரு முறையாவது இந்தியாவிற்குப் போன் செய்து, குழந்தைகளிடம் பேசுவாள் என் மனைவி. வந்து சேர்ந்த ஒரே வாரத்தில் வாங்கிய அலவன்ஸ் அனைத்தும் ISDக்குப் போய்விடுமோ என்றெண்ணி, டெம்பாலஜி மானேஜரிடம் சென்று, டெலிபோனுக்கு இது வரை எவ்வளவு ஆகியுள்ளது என்று கேட்டு வருவதாகச் சொன்னாள். மறுநாள் மானேஜரைக் கண்டவளுக்குக் கலவரம். ஏனென்றால் அந்த மானேஜர் பெண்மணிக்கு அகவை இருக்கும் அறுபதற்கும் மேல். இவளிடம் ஆங்கிலத்தில் எப்படிப் பேசிப் புரிய வைப்பது என்று வியந்தாள். ஆனால், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல், தான் பயின்ற பரதக்கலையின் அபிநயங்களை எடுத்து விடுவது என்று தீர்மானித்தாள்.

அபிநயப் பிரயோகம் செய்து கொண்டே, "my.. children..abroad... daily.. telphone..bill..." என்று ஆங்கில வார்த்தைகளையும் சின்க்ரொனைஸ் செய்து, இறுதியாக "கொபியான்?...கொபியான்?" என்றாள். (கொபியான் என்றால் எத்தனை, ஹௌ மச், கித்னே..) அந்த வயதான மேனேஜரோ உடனே, "You want to know how much you have spent on the telephone bill. Why dont you ask properly?" என்று நெத்தியடி போட்டாள்.

"உங்களுக்கு இங்கிலீஷ் தெரியும் என்று எனக்கு எப்படித் தெரியும்", என்று பின்னர் வழிந்தாள்.

சரி, இனிமேல் உஷாராக இருக்க வேண்டுமென எண்ணி, மெய்லோன் சென்றபோது, ஒரு நடுத்தர வயது ஆசாமியிடம் வழி கேட்கும் முன், "Can you speak English?" என்றோம். அந்தக் குசும்பு பிடித்த மனிதன், "Yes. I can speak; But I will get pimples" என்றான்.

அப்புறம். அந்த 'இண்டிக்கி' விஷயம் சொல்லி முடித்து விடுகிறேன். எனது மனவி சில வருடங்கள் ஒரு கிண்டர் கார்டன் பள்ளியில் டீச்சராக இருந்தாள். குழந்தைகளைக் கவனிக்க, ஒவ்வொரு வகுப்பிற்ற்கும் ஒரு ஆயாவும் உண்டு. பள்ளி திறந்த புதிதில், ஒவ்வொரு குழந்தையும் ஏதோவொரு காரணத்திற்காக அழ ஆரம்பிப்பது வழக்கம்.

இப்படித்தான் ஒரு நாள், சுதீர்பாபு, "இண்டிக்கிப் போத்தானு" என்று அழ ஆரம்பித்து விட்டான். உடனே, இவள், ஆயாவைக் கூப்பிட்டு, "ஆயாம்மா. இந்த சுதீர்பாபுவை, டாய்லெட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய்விட்டு வா" என்றாள். டாய்லெட் போய்விட்டு வந்த, சுதீர்பாபு, சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பிறகு சில நிமிடங்களில் மீண்டும், "இண்டிக்கிப் போத்தானு" என்று அழத் தொடங்கி விட்டான்.

"ச்சீ. சும்மாயிரு. இப்பத்தானே, இண்டிக்கி போயிட்டு வந்தே. எத்தனை முறை இண்டிக்கி போவே." என்று அதட்டினாள்.

ஆயாம்மா உடனே, "டீச்சர். அந்தப் பையன் தெலுங்கிலே பேசறது உங்களுக்குப்
புரியலையா? 'இண்டிக்கிப் போத்தானு'ன்னா, 'வீட்டிக்குப் போறேன்'னு அர்த்தம்." என்றாள்.

'நல்லவேளை. சுதீர்பாபுவின் அப்பாவிடம் ஏதேனும், உளராமல் இருந்தோமே' என்று னிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.