Saturday, November 06, 2010

பந்து விளையாட்டும், பஞ்சரத்ன கீர்த்தனையும்


சமீபத்தில் 'பெட்ரோடெக் 2010" மாநாட்டிற்காக புது டெல்லி சென்றிருந்தேன். நோய்டாவிலிருந்து வந்த டாக்சி டிரைவர் ராம்சிங்கிற்கு புது டில்லி அவ்வளவு பரிச்சயம் இல்லை போலும். ஆனால் எல்லாம் தெரிந்த மாதிரி வண்டியை ஓட்டிக்கொண்டு ராஜ்பாத், ஜனபாத், அக்பர் தெரு போன்ற முக்கிய தெருக்களிலெல்லாம் அழைத்துச் செல்கிறார். நானோ 'ஹிந்தி நஹி மாலும் ஹை' கேஸ். இருவரும் சேர்ந்து கொண்டு "விக்ஞான் பவனை" தேடிக்கொண்டு, இந்தியா கேட்டினை ஐந்து முறை வலம் வந்துவிட்டோம்.

திடீரென புதிதாக வாங்கிய நோக்கியா E71ல் GPS இருப்பது ஞாபகம் வந்தது. நேவிகேட்டர் துணை கொண்டு விக்ஞான் பவனைத் தேட அதுவோ, மீண்டும் மீண்டும் இந்தியா கேட்டையே சுற்றி வந்தது. வழியில் எங்கும் நிறு்த்த அனுமதி இல்லாத அதிகாரவர்க்கம் நிறைந்த மையப்பகுதி. டிரைவர் வண்டியை கூலாக நிறுத்தி வழி கேட்கப் போக, புது டில்லியில் ஏ.கே7 கையால்தான் இறுதி மூச்சோ என்று எனக்குப் பதைபதைப்பு. ஒருவழியாக வழி கண்டுபிடித்து, விக்ஞான்  பவனுக்கு என்னை கொண்டு சேர்த்தார்.

E71ல் GPS எனது கவனத்தை ஈர்த்த ஒரு இடம் த்யாகராஜ் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ் (Thyagaraj Sports Complex). த்யாகராஜ் என்றால் தமிழ்ப் பெயர் போல இருக்கின்றதே என்று யோசித்தேன். ஹாக்கியில் தன்ராஜ் பிள்ளையின் பெயர் தெரியும். ஆனால் த்யாகராஜ் என்பது யார் என்று யோ்சித்தேன், யோசித்தேன். யார் அவர் என்று என் சிற்றறிவுக்குச் சிறிதும் எட்டவில்லை. சரி கூகுளார் உதவியை நாட விடை கிடத்துவிட்டது. விடை தெரிந்தவுடன் அப்படியே ஷாக் ஆயிட்டேன்!!!

இந்த ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ் சமீபத்தில்தான் காமன்வெல்த் கேம்ஸுக்காக கட்டப்படதாம். யார் பெயரில் கட்டப்பட்டது என்றால், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸத்குரு த்யாகராஜ ஸ்வாமிகளின் பெயரிலாம். அவருக்கும் விளையாட்டுத் துறைக்கும் என்னய்யா சம்பந்தம்? பந்துவராளியிலும், கௌளிபந்துவிலும் பாடினது தவிர. சரி பெயரை வைத்ததுதான் வைத்தார்கள். ஒரு அடைமொழி? வேண்டாம். த்யாகராஜர் என்ற முழுப் பெயரையாவது வைத்திருக்கலாமே? அதென்னெ ஸ்டைலாக சத்யராஜ், சிபிராஜ் மாதிரி த்யாகராஜ். யார் இப்படி ரூம் போட்டு யோசிச்சது?

உங்களில் யாருக்கேனும் காரணம் தெரிந்தால் சொல்லுங்களேன்.

- சிமுலேஷன்

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 06 - சாருகேசி

அந்தக் காலத்தில் அரிதாக ஒலித்துக் கொண்டிருந்த "சாருகேசி" ராகத்தில், ஜி.ராமநாதன் அமைத்த அழகான பாடல்தான் "மன்மத லீலையை வென்றார் உண்டோ?" (படம் ஹரிதாஸ்). ஜி.ராமநாதனது அபாரக் கற்பனையில் உதித்த இந்த மெட்டு கர்நாடக சங்கீததிற்கே ஒரு முன்னுதாரணமாக் இருந்தது. செம்மங்குடி ஸ்ரீநிவாஸ ஐயர் ராமநாதனை இந்தச் சங்கீதக் கொடைக்காக நேரே சென்று வாழ்த்தினாராம். ஸ்வாதித் திருநாளின் "க்ருபையா பாலய" செம்மங்குடி அவர்களின் மூலம் ப்கழ்பெற்றதற்குப் பெரிதும் காரணமாக அமைந்தது "மன்மத லீலையை வென்றார் உண்டோ" என்ற மெட்டே காரணமாகும். இதன் பின்னரே சாருகேசி ராகம் கர்நாடக இசையிலும், த்மிழ்த் திரையிசையிலும் பெரிதும் இடம் பெற ஆரம்பித்தது.

இந்த இராகத்தின் விபரங்கள் வருமாறு:-

இராகம்:சாருகேசி
26ஆவது மேளகர்த்தா இராகம்
ஆரோகணம்: ஸ ரி2 க3 ம1 ப த1 நி2 ஸ்
அவரோகணம்: ஸ நி2 த1 ப ம1 க3 ரி2 ஸ

மேலே உள்ள 26ஆவது மேளகர்த்தா ராகமாகிய இந்த சாருகேசி ராகத்தின் ஆரோகணத்தினையும், அவரோகணத்தினையும் கூர்ந்து பார்த்தால்,  பூர்வாங்கம் சங்கராபரணத்தினைப் போலவும், உத்தராங்கம் தோடியினைப் போலவும் இருப்பதனைக் கவனிக்கலாம்.

இப்போது சாருகேசி இராகத்தில் அமைந்த்துள்ள தமிழ்த் திரையிசைப் பாடல்களைப் பார்ப்போமா?

பாடல் - திரைப்படம்

01. ஆடல் கலையே தேவன் தந்தது - ஸ்ரீராகவேந்திரர்
02. ஆடல் காணீரோ - மதுரை வீரன்
03. அம்மா நீ சுமந்த பிள்ளை - அன்னை ஓர் ஆலயம்
04. அம்மம்மா தம்பி என்று - ராஜபார்ட் ரங்கதுரை
05. அரும்பாகி மொட்டாகி - எங்க ஊரு காவக்காரன்
06. சின்னத் தாயவள் - தளபதி
07. எங்கெங்கே எங்கெங்கே - நேருக்கு நேர்
08. காதலி காதலி - அவ்வை ஷண்முகி
09. மலரே குறிஞ்சி மலரே - Dr.சிவா
10. மணமாலையும் மஞ்சளும் - வாத்தியார் வீட்டுப் பிள்ளை
11. மன்மத லீலையை வென்றார் உண்டோ - ஹரிதாஸ்
12. மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா - அரங்கேற்றம்
13. மாறன் அவதாரம் - ராஜகுமாரி
14. மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் - நானே ராஜா நானே மந்திரி
15. மொட்டு விட்ட முல்லக் கொடி - அறுவடை நாள்
16. நடந்தாய் வாழி காவேரி - அகத்தியர்
17. நாடு பார்த்ததுண்டா - காமராஜ்
18. நடு ரோடு - எச்சில் இரவுகள்
19. நீயே கதி ஈஸ்வரி - அன்னையின் ஆணை
20. நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் - ராணி சம்யுக்தா
21. நோயற்றே வாழ்வே - வேலைக்காரி
22. ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன் - தேனிலவு
23. பெத்த மனசு - என்னப் பெத்த ராசா
24. ரத்தினகிரி வாழும் சத்தியமே - பாட்டும் பரதமும்
25. சக்கர கட்டி சக்கர கட்டி - உள்ளே வெளியே
26. செந்தூரப்பாண்டிக்கொரு ஜோடி - செந்தூரப்பாண்டி  
27. சிறிய பறவை உலகை - அந்த ஒரு நிமிடம்
28. தூது செல்வதாரடி - சிங்கார வேலன்
29. தூங்காத கண்ணின்று ஒன்று - குங்குமம்
30. உன்னை நம்பி நெத்தியிலே - சிட்டுக்குருவி
31. உயிரே உயிரின் ஒலியே - என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
32 வசந்த முல்லைப் போலே வந்து - சாரங்கதாரா


ஜி.ராமநாதன் அமைத்து எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிப் பெரும் புகழ் பெற்ற "மன்மத லீலையை வென்றார் உண்டோ?" (படம் ஹரிதாஸ்) பாடலை முதலில் கேட்போம்.


"இந்தப் புறா ஆடவேண்டுமென்றால் இளவரசர் பாடவேண்டும்" என்ற புகழ்பெற்ற வசனத்துடன் துவங்கும் "வசந்தமுல்லைப் போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே" என்ற பாடல் சாருகேசியில் அமைந்த புகழ்பெற்ற பாடலாகும். இடம் பெற்ற படம் 1957ல் வந்த சிவாஜி கணேசன் நடித்த 'சாரங்கதாரா".


மீண்டும் சிவாஜி கணேசன் மற்றும் சாரதா நடித்த "குங்கு்மம்" படத்திலிருந்து மற்றுமொரு பாடல், சாருகேசி ராகத்தில்.


ரஜனி நடித்த ஸ்ரீராகவேந்திரர் படத்தில் ஜேஸு்தாஸ் குரலில் வந்த "ஆடல் கலையே தேவன் தந்தது" சாருகேசி ராகத்தில் அமையப்பெற்ற ஒரு அழகான பாடலாகும்.


சாருகேசி ராகம் ஒரு மென்மையான ராகம் என்பதற்கு ஒரு உதாரணம் "சிங்காரவேலன்" படத்தில் வந்த "தூது செல்வதாரடி கிளியே" என்ற பாடல்.


சமீபத்தில் வெளிவந்த பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் "உதயா உதயா உளருகிறேன்" என்ற பாடலாகும். இந்தப் பாடலை முதன்முறையாக "ஏர்டெல் சூப்பர் சிங்கர்" இறுதிச் சுற்றில் ரோஷன் என்ற சிறுவன் ஆண்-பெண் குரலில் பாடியபோது அது நெஞ்சைவிட்டு அகலவில்லை. அவ்வளவு இனிமையான பாடல். ஆனால் இந்தப் பாட்டு எந்தப் படப் பாடல் என்று தேடிப்பார்த்த போது, எப்படி ஒரு அழகான பாடலைக்கூட திரையுலகில் கேவலமான ஒரு கோரியாகிரபி மூலம் கொல்லமுடியும் (விஜய், சிம்ரன் குத்து) என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.இதே பாடலை ரூபா என்பவர் பாடியுள்ளதைக் கேளுங்கள்.




தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 05 - மாயாமாளவ கௌளை

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 04 - மோகனம்

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 03 - கீரவாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா

 - சிமுலேஷன்