Friday, December 30, 2005

இரட்டை வயலினில் இராகப் ப்ரவாகம்

இரட்டை வயலினில் இராகப் ப்ரவாகம்
-------------------------------------------------

எம்.ஜி.ஆர் அவர்கள் ஒர் சிறந்த இசை இரசிகர் என்பது அவர்தம் படப் பாடல்களினாலேயே விளங்கும். ஒரு முறை அவர் தூரதர்ஷனில் வயலின் இசைக் கச்சேரி ஒன்று கேட்டுவிட்டு, அந்த வயலின் கலைஞர்களுக்கு ஓர் பாராட்டுக் கடிதம் எழுதினார். சில நாட்களில் அவர்களை தமிழக அரசின் அரசவைக் கலைஞர்களாகவும் நியமனம் செய்தார். அப்புகழுக்குரியவர்கள் யாரென்றால், பிறவிக் கலஞர்களான (prodigy) கணேஷ், குமரேஷ் சகோதரர்ளாகும்.

னேற்றைய தினம், நாரத கான சபாவில், கணேஷ், குமரேஷ் இரட்டை வயலின் கச்சேரி சென்னை இரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. னாட்டை. கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீராகம் அடங்கிய பஞ்சராக மாலிகா வர்ணத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் துவங்கிய இந்த வர்ணத்தை இயற்றியவர் குமரேஷாம். இரண்டாவதாக சிந்துனாமக்ரியாவில் 'தே
வாதி தே சதாசிவா' என்ற பாடலும், அதனையடுத்து சுப்பராய ஸாஸ்திரியின் முகாரி இராகப் பாடலும் தொடர்ந்தது.

மூன்றாவது பாடலுக்குப் பிறகு, முப்பது பேர் கலையத் துவங்க, கணேஷ், Good night to all the friends who are leaving என்று சிரித்துக் கொண்டே சொன்னது இரசிக்கும்படி இருந்தது. அடுத்ததாக வந்தது 'இராஜராஜேஸ்வரி திரிபுர சுந்தரி' என்ற பூர்ணசந்த்திரிகா இராகப் பாடல்.

ஐந்தாவதாக இவர்கள் வாசித்தது ஒரு புதுமையான உருப்படியாகும். ஸாஹித்யம் ஏதுமின்றி, இராகம் மட்டுமே வாசித்தனர். எடுத்துக் கொண்ட இராகம் தர்மவதி. தாளம் கண்டசாபு. இதற்கு 'இராக ப்ரவாகம்' என்று பெயரிட்டிருந்தனர். தர்மவதியின் எல்லாப் பரிமாணங்களையும் எடுத்துக்காட்டும் வண்ணம் அமைந்திருந்திருந்தது இது. மிருதங்கமும், கடமும், கஞ்சிராவும் ஒ
வ்வொன்றாக, கை கோர்த்து வந்த அமைப்பு அமர்க்களமாக அமைந்திருந்தது. சபையில் நிலவிய பரிபூரண அமைதி, இரசிகர்கள் தர்மவதியில் ஒன்றிவிட்டார்கள் என்பதற்கு சாட்சியாய் இருந்தது.

பின்னர் வாகதீஸ்வரியில் பாடிய ஒர் பாடலுக்கு தனி ஆவர்த்தனம் கொடுக்கப்பட்டது. அடுத்தாக அகிலமும் அறிந்த, 'அகில¡ண்டேஸ்வரி ரட்சமாம்". ஜுஜாவந்தியில். ரேவதி, சிவரஞ்சனி, நாட்டை, வாஸந்தி, குந்தளவராளி அடங்கிய இராக மாலிகாவின் வித்தியாசமான பிடிப்புகள் கணேஷ், குமரேஷ் அவர்களுக்கே உரித்தானது.

கணேஷ் அவர்களிடம் ஒர் குணம். திடீரென்று வயலினை ஓரம் கட்டி விட்டு, பாட்டுப் பாட ஆரம்பித்து விடுவார். இரசிகர்களுக்கும் இது ஓர் எதிபாராத விருந்தாகவே அமைந்து விடுகின்றது. 'பள்ளி பள்ளி இராமா' என்ற பாடலை அவர் முழுமையாகப் பாடியதை சபை இரசிக்கவே செய்தது.

பெஹாக்கில் ஒரு அருமையான பாடல். அருமையான வாசிப்பு. நடனம் தெரிந்த எவரேனும் இருந்திருந்தால் அவர்கள் வாசித்த பெஹாக்கிற்கு நடனமாடத் துடித்திருப்பர்கள். சிந்து பைரவியில் ஒரு வித்தியாசமான வாசிப்புடன் வாசித்து, நிகழ்ச்சியை நிறைவு செய்தனர் கணேஷ்,குமரேஷ் சகோதரர்கள்.

இரவு ஒன்பது மணி முப்பது நிமிடங்களுக்கு முடிந்த இரட்டை வயலின் நிகழ்ச்சியில், இளைஞர்கள் பலர் இறுதி வரை இருந்து இரசித்தது ஓர் ஆரோக்கியமான விஷயம்.

நடு இரவில் இசை - புத்தாண்டை வரவேற்க

கர்னாடிகா.காம் மற்றும் ம்யூசிக் அகாடெயின் ஆதரவில் இன்று இசை நிகழ்ச்சிகளுடன், புத்தாண்டு வரவேற்கப்படவிருக்கின்றது.
குழு இசையும், ஒலி, ஒளிக் காட்சிகளும், வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகளும் இடல் பெறும் இந்த இசை நிகழ்ச்சியில், கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரபலங்கள் பங்கேற்பதாகக் தெரிகின்றது.

இடம்: சென்னை ம்யூசிக் அக்கடெமி
னேரம்: 11 pm. - 1 am
மேலதிக விபரங்களுக்கு: 42124130 / 98400 15013

இது ஒரு ALL AR WELCOME நிகழ்ச்சி

Tuesday, December 27, 2005

கர்னாடக இசைக் கலைஞர்களை வைத்து ஒரு ஆர்கெஸ்ட்ரா

கர்னாடக இசைக் கலைஞர்களை வைத்து ஒரு ஆர்கெஸ்ட்ரா யாராவது செய்தால் எப்படி இருக்கும் அன்று அடிக்கடி எண்ணிக் கொள்வேன். வெற்றிகரமாகவும், புதுமையாகவும், ஏதேனும் செய்து வரும் முத்ரா பாஸ்கர் உபயத்தால் நேற்று அந்த ஆசை நிறைவேறியது. நேற்று வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள ப்ரீடம் ஹாலில் நடைபெற்ற இந்த கர்னாடிக் ஜுகல் பந்தி நிகஷ்ச்சியில், குழல், கீ போர்ட், சிதார், தபலா உதவியுடன் 8 பாடகர்கள் திரு.எல்.கிருஷணன் இசை அமைத்த 24 பாடல்களை பாடினர். உங்களில் பலருக்கும் தெரிந்த பாடல்கள்தான். பாடல்களின் விபரமும், பாடியவர்கள் பெயரும் தருகின்றேன்.

1. பச்சை மாமலை போல் மேனி - பூபாளம் - சாருலதா மணி
2. ஜகஜ்ஜனனி சுகவாணி கல்யாணி - ரதி பதிப்ரியா - தர்ஷினி
3. கண்ணா வா - மதுவந்தி - டாக்டர்.ராதா பாஸ்கர்
4. ஆறுமுகம் (திருப்புகழ்) - folk tune - ஸ்ரீகாந்த்
5. ஸ்திரதா நஹி நஹி - சாருகேசி - சைந்தவி
6. தந்¨தை தாய் - ஷண்முகப் ப்ரியா - கீதா ராஜா
7. அமைதியில் - பௌளி - சுபிக்ஷா
8. வந்தேஹம் - யமன் கல்யாணி - டாக்டர்.கணேஷ்
9. வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் - மாண்டு - சாருலதா மணி
10. திக்கெட்டும் - ராகேஸ்ரீ - தர்ஷினி
11. ஸர்வம் ப்ரம்ஹ மயம் - பஸந்த் பஹார் - டாக்டர்.ராதா பாஸ்கர்
12. விட்டு விடுதலை - கீரவாணி - ஸ்ரீகாந்த்
13. ராமநாம - சாலக பைரவி - சுபிக்ஷா
14. கனிகள் கொண்டு வரும் - மத்யமாவதி - சைந்தவி
15. நாதவிந்து கலாதி - நாத நாமகிரியா - கீதா ராஜா
16. துன்பம் நேர்கையில் - தேஷ் - டாக்டர்.கணேஷ்
17. எத்தனை இன்பங்கள் - தர்ஷினி
18. கூவி அழைத்தால் - வலஜி - டாக்டர்.ராதா பாஸ்கர்
19. ரகுவர தும்கோ - காபி - ஸ்ரீகாந்த்
20. கேலதி மம ஹ்ருதயே - சைந்தவி
21. கலியுக வரதன் - ப்ருந்தாவன் சாரங்கா - கீதா ராஜா
22. சந்தன சர்ச்சித - பஹாடி - சுபிக்ஷா
23. போ சம்போ - ரேவதி - டாக்டர்.கணேஷ்
24. சாந்தி நிலவ வேண்டும் - திலங் - கோரஸ்

எல்.கிருஷணன் அவர்களை உன்னிக் கிருஷ்ணண் மோதிரம் அணிவித்துக் கௌரவித்தார். விழாவிற்கு வந்த மற்ற முக்கியமானவர்கள் பின்னணிப் பாடகர்கள் பி.பி.ஸ்ரீனிவாஸ் மற்றும் ராஜ்குமார் பாரதி.

வழக்கம் போலவே டாக்டர்.ராதா பாஸ்கர் அவர்களும், முத்ரா பாஸ்கர் அவர்களும், நிறைவான ஒர் நிகழ்ச்சி வழங்கி, பார்வையாளர்களப் பரவசப்படுத்தினர். மதுசூதனன் தபேலாவில் பூந்து விளையாடி விட்டார். ராமானுஜம் புல்லாங்குழலில் கானடா மற்றும் ப்ருந்தாவன சாரங்காவில் கலக்கினார். கீ போர்ட் சத்யா ஒரிரு பாடல்களுக்கு மட்டுமே முழுமையாக வாசித்தாலும், கூட்டத்தின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்தார். ஆண்களில் டாக்டர்.கணேஷ¤க்கும் பெண்களில் சைந்தவிக்கும் மானசீகமாக முதல் பரிசைத் தாராளமாகத் தந்தோம். சம்பிரதாயக் கச்சேரி அல்ல என்றாலும், எல்லாத் தரப்பினரையும் கவர்ந்தது னிகழ்ச்சி.

சங்கீத நிகழ்ச்சிகளில் பாரம்பரியம் கெடாமல் புதுமை புகுத்தி வரும், முத்ரா தம்பதியினருக்கு, 'சங்கீத நவீன கலா போஷகா' போன்ற விருதுகள் யாரேனும் தந்தால் ஆச்சரியப்படத் தேவையில்லை

- சிமுலேஷன்

Sunday, December 25, 2005

பாமரனுக்கும் இசை சேர வேண்டுமா?

புரிந்து கொள்வது என்பது வேறு. இரசிப்பது என்பது வேறு. புரிந்து கொண்டால் மேலும் இரசிக்க முடியும் என்பதும் உண்மை.

"கர்னாடக இசை எனக்குப் புரியவே மாட்டேன் என்கிறது. ஏன் பாமரனை அடையும் படியாக பாட யாரும் பாட முயற்சி செய்ய மாட்டேன் என்கிறார்கள்" என்று பலரும் அடிக்கடி கூறுகிறார்கள்.

எதற்காக இந்த உயர்ந்த கலை மட்டும் பாமரனைச் சென்றடைய வேண்டும், அந்தப் பாமரன் தனது அறிவையும், இரசனைத்தன்மையயும் உயர்த்திக் கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் பட்சத்தில்.

னேர் நேர் தேமா; நிரை நேர் புளிமா; நேர் நிரை கூவிளம்; நிரை நி¨ரி கரு விளம் என்றெல்லாம் அலகிட்டு வாய்பாடு கூறி, குறட்பாக்களையும், வெண்பாக்களயும் இரசித்துக் கொண்டிருக்கும் புலவர்கள் கூட்டத்திலும், அவர்தம் பாக்களை இரசிக்கும் மக்களிடமும் சென்று, யாராவது, "தலிவா; "செல் அடிச்சா ரிங்கு; சிவாஜி அடிச்சா சங்கு'ன்னு புரியராமாறி சொல்லு; நேர் நேர் தேமா அப்படீ இப்படீன்ன்னு சொல்லிக் கிட்டேயிருந்தா, இந்த எலக்கியமெல்லம் அழிஞ்சிடும்" என்று சொன்னால் அவர்கள் என்ன சொல்லுவார்கள்.

மௌனியிடமோ, சு.ராவிடமோ, ஆதவனிடமோ சென்று, நீங்கள் எழுதுவது எனக்கு ஒன்றும் புரியவில்லை. பாமரனைச் சென்று அடையுமாறு, ராஜேஷ் குமார் போலவோ, பட்டுக் கோட்டை பிரபாகர் (no offence meant; they are for a diffrent audience) போலவோ ஏன் எழுத மாட்டேன் என்கிறீர்கள் என்று சொன்னால் அவர்கள் என்ன சொல்லக்கூடும்.

பரதத்திலும் கூடப் புதுமையாக என்று செய்தாலும், ஒரு சில கருத்துக்கள்தானே செய்ய முடியும். என்னுடையது மிகவும் புதுமையானது மற்றும் இளஞர்களுக்கானது என்று கூறி, ISO 9000, CMM LEVEL-5, BIO-DIESEL என்ற தலைப்புகளில் ஆட ஆரம்பித்தால் எப்படி இருக்கும்?

மாற்றங்கள் தேவைதான்; ஆனால் ஒரு எல்லைக் கோட்டுக்குள்ளேயே ஆட்டத்தை மாற்றி விளையாட முடியும். இவ்வாறும் புதுமைகள் செய்தவர்கள் பலர் உண்டு. உதாரணாம் வருமாறு:-

டி.வி.கோபாலகிருஷ்ணன அவர்கள் ஒரே கச்சேரியில் முதல் பாதியில் கர்னாடிக் கச்சேரியும், இடை வேளைக்குப் பிறகு ஹிந்துஸ்தானியும் செய்வார். இதில் இன்னுமோர் விஷெசமென்றால், முதல் பாதியில் சட்டை, வேஷ்டியுடன் வரும் அவர் அடுத்த பாதியில், பைஜாமா குர்தாவுடன் வருவார்.

சமீபத்தில் ஒரு வீணைக்கலஞர் சொன்னார். "புதுமையாக ஏதாவது பண்ணுங்கள்; புதுமையாக ஏதாவது பண்ணுங்கள்" என்று நச்செரிக்கிறார்கள். "வீணையைத் தலை கீழாக வேண்டுமென்றால் பிடித்துக் கொண்டு வாசிக்கலாமோ என்னவோ" என்றார். அவர் ஏற்கெனவே வீணையில் திரைப் பாடல்கள் வாசித்து வருபவர்தான். அதற்காக, கர்னாடக இசையில் அதை எதிர்பார்க்க முடியுமா? உன்னி, பாம்பே ஜெயஸ்ரீ, ஜேஸ¤தாஸ் போன்றோர் சினிமாவில் பாடுபவர்கள்தான். அதற்காக, கர்னாடக இசையில் சினிமாப் பாடலை எதிர்பார்க்க முடியுமா?

எனக்கு ஒரு கலை புரிவதில்லை என்று சொல்லுவது கலையின் குற்றமா? கலஞனின் குற்றமா? இரசிகனின் குற்றமா? "எனக்குப் புரியவில்லை; ஆகவே விடுகின்றேன் சாபம் ; உங்கள் கலை அழிந்து விடும்" என்பது னியாமா?

-சிமுலேஷன்

Saturday, December 24, 2005

கர்னாடக இசையில் தமிழ்த் திரைப் பாடல்கள்

கர்னாடக இசையில் தமிழ்த் திரைப் பாடல்கள்

தமிழ்த் திரைப் பாடல்களில் கர்னாடக இசை இராகங்கள் என்ற கருத்தைக் கொண்டு,
'ராகசிந்தாமணி" என்ற தலைப்பில் நான் வெளியிட்டிருந்த புத்தகம் குறித்து, திரு.சுஜாதா அவர்கள், இந்த வார ஆனந்த விகடனில் 'கற்றதும் பெற்றதும்" கட்டுரையில் குறிப்பிட்டது அறிந்து வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி.

தமிழ்த் திரைப் பாடல்களில் கர்னாடக இசை ஒரு புறமிருக்க, கர்னாடக இசையில் தமிழ்த் திரைப் பாடல்கள் பற்றிப் பார்ப்போம்.

கர்னாடக இசையில், பாரதி பாடல்கள், பாரதிதாசன் பாடல்கள், சிலப்பதிகாரப் பாடல்கள் அதிகம்
பாடப்பட வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர். ஆனால், டி.கே.தியாகராஜ பாகவதர்,
பி.யூ.சின்னப்பா, கே.பி.சுந்தராம்பாள் பாடல்கள் பாடினால் எப்படி இருக்கும்? நன்றாகவே
இருந்தது. நேற்றைய தினம், ஸ்ரீ பார்த்தசாரதி சபா ஆதரவில் நடை பெற்ற, திரு.சூர்யபிரகாஷ்
(ரிசரிவ் வங்கியில் வேலை) அவர்கள் தனது நிகழிச்சியில், ஒரு மணி நேரம் வழக்கமான
பாரம்பரியக் கச்சேரி நிகழ்த்தி விட்டு, அடுத்த ஒன்றரை மணி நேரம் 40-50களில் வெளிவந்த
பழம்பெரும் திரைப்பாடல்களைப் பாடி அசத்தினார்.

திருனீலகண்டர் படத்தில் இடம் பெற்ற, "ஒரு நாள் ஒரு பொழுதாகினும்" என்ற கமாஸ் இராகப்
பாடலுடன் இந்தப் பகுதியைத் துவங்கினார். அடுத்தாக, அஷோக் குமார் படத்திலிருந்து,
ஜோன்புரி இராகத்தில், "ஞானக்கண் ஒன்று" என்ற பாடல். ப்ருகாக்கள் அமர்க்களம். பின்னர்,
ஸ்ரீரஞ்சனி இராகத்தில், நத்தனார் படல் பாடலான, "வீணில் உலகைச் சுற்றி". அதன்பின்,
அனைவரும் அறிந்த, "தீன கருணாகரனே நடராஜா". கூட்டத்தினர் தன்னை மறந்து இரசித்தனர்.

அடுத்ததாக, "கோடையிலே இளைப்பாறி" என்ற ஓர் அருமயான விருத்தம். பி.யூ.சின்னப்பா
பாடல் என்று நினைக்கின்றேன். உச்சஸ்தாயியில் பாடத் துவங்க, கேன்டீன் ஊழியர்கள் உட்பட,
அனவரும் அரங்கில் குவிந்து, ஆவென்று வாய் பிளந்து இரசித்தனர். "பாற்கடல் அலை மேலே,
பாம்பணை மேலெ" என்ற இராக மாலிகையும் நன்றாகவே இருந்தது. ஆனால், சற்றே பெரிய
பாடல். சிவகவியின் புகழ்பெற்ற, "அம்பா மனம் கனிந்து" இரசிகர்கள் மனதைக் கவர்ந்த்தில் ஐயம் இல்லை. மீண்டும் ஒரு ஜோன்புரி, அஷோக் குமாரிலிருந்து, "சத்வ குண போதன்". அருமையான பாடல் என்பதனால், அதே இராகம் மீண்டும் இடல் பெற்றதில் தவறில்லை என்று
நினைத்திருந்திருப்பார்.

மொத்ததில் நிகழ்ச்சி புதுமையாகவும், இனிமையாகவும் இருந்தது. ஆனால் சூர்யப் பிரகாஷே
குறிப்பிட்டபடி, அளவுக்கு மீறினால், பாரம்பரிய இரசிகர்கள், அமிர்தமும் நஞ்சே என்பார்கள்.


- சிமுலேஷன்

Friday, December 09, 2005

புயலுக்குப் என்ன பெயர்?

புயலுக்குப் என்ன பெயர்?

மேற்கத்திய நாடுகளின் மரபை ஒட்டி, நாமும் புயலுக்குப் பெயர் வைக்க ஆரம்பித்துவிட்டோம். ஆனால் பெயரில் என்ன? (What is in a name?) என்று அசட்டையாக இருந்து விடக் கூடாது. பாஜ் என்றும் பனூஸ் என்றும் யோசனையின்றிப் பெயர் வைப்பது ஆபத்தையே விளைவிக்கும். fanoos என்பதன் கூட்டுத் தொகை 6 ஆகும். இதனால் அதிக சேதங்கள் ஏற்படல்லாம். அதற்குப் பதிலாக fanoosh என்று ஒரு h சேர்த்துக் கொண்டால் சேதங்கள் குறைய வாய்ப்புண்டு.

அமெரிக்காவில் ரீட்டா என்ற புயல்லால் ஏற்பட்ட சேதங்கள் ஏராளம். காரணம் புயலுக்கு மட்டும் ர, ரா, ரி, ரீ என்று ரன்னகரத்தில் துவங்குமாறு பெயர் வைக்கவே கூடாது. அடித்த முறை புயலுக்குப் பெயர் வைக்கும் போது அடியேனிடம் ஒரு யோசனை கேட்டுவிட்டு வையுங்கள்.

Sunday, November 27, 2005

தமிழ்த் திரைப்படப் பாடல்களில் இராகங்கள்

சங்கீத சீசன் துவங்கி விட்டது. தமிழ்த் திரைப்படப் பாடல்கள் மூலம் கர்னாடக இசையின் இராகங்களை எப்படி இரசிப்பது என்ற எண்ணத்தில் "ராகசிந்தாமணி" என்ற தலைப்பில் (ஆங்கிலத்தில்) ஒர் புத்தகம் பதிப்பித்துள்ளேன். இதில் 1800 பாடல்கள் 160 இராகஙளில் வகைபடுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு இராகதிற்கும், ஆரோகணம், அவரோகணமும் மற்றும் பல சுவையான விஷயஙளும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு பக்கத்திலும் குவிஜ் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்ற 20ம் தேதி ஞாயிறு காலை பத்து மணியளவில் சென்னை, மயிலாப்பூரிலுள்ள பாரதீய வித்யா பவன் மினி அரங்கில் நடை பெற்றது. புத்தகத்தை வெளியிட்டவர்: வீணைக்கலைஞர். கலைமாமணி.திருமதி.ரேவதி கிருஷ்ணா அவர்கள். முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டவர். சன் தொலக்காட்சி செய்திகள்/சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சி நடத்தும் திரு.டி.எஸ்.ரங்கனாதன் அவர்கள்.

மேலதிக விபரங்களளுக்கு http://www.geocities.com/ragachintamani/ என்ற சுட்டியைச் சொடுக்கவும்.

மேற்கண்ட புத்தகம் கீழ்க்காணும் இடங்களில் கிடைக்கும்.

www.giritrading.com
www.kutcheribuzz.com
www.tkmbc.org
www.anyindian.com
www.sapthaswara.com
www.shanthitailors.com

Tuesday, November 01, 2005

கிழவரும், சிறுவனும், கழுதையும்

'முயலும் ஆமையும்' கதை படித்ததின் பாதிப்பு:

ஒரு கிழவர் தனது பேரனுடனும், தனது கழுதை ஒன்றுடனும் ஒர் கிராமத்தின் வழியே சென்று கொண்டிருந்தார்.

வழியிலே இவர்களைப் பார்த்த சிலர், "இந்தச் சிறுவனை வெயிலிலே நடத்திக் கூட்டி கொண்டு செல்கிறார் பார், இந்தப் பெரியவர்". என்று சொன்னார்கள்.

பேரன் கழுதை மீது அமர்ந்து கொண்டு செல்லலானான்.

வழியிலே இவர்களைப் பார்த்த சிலர், "வயதான மனிதரை நடக்க விட்டு, சிறுவன் சவாரி செய்து கொண்டு செல்கின்றானே", என்று சொன்னார்கள்.

உடனே, சிறுவன் கீழிறங்கித் தாத்தாவை, கழுதை மீது அமர வைத்தான்.

சிறிது நேரம் சென்றது.

இவர்களையே பார்த்துக் கொண்டிருந்த நபர் ஒருவர், "இரண்டு பேரும், கழுதை மீது ஏறிச் செல்லலாமே. எதற்குக் கஷ்டப்படுகிறீர்கள்?, என்றார்.

உடனே, இருவரும் கழுதை மீது பயணிக்கத் துவங்கினர்.

சிறிது நேரம் கூட ஆகியிருக்காது. ஜீவ காருண்யம் மிக்க நபர் ஒருவர், இவர்களைப் பார்த்து, "இந்த
அனியாயத்தை கேட்பார் இல்லையா? ஒரு வாயற்ற ஜீவனை இப்படித் துன்புறுத்தலாமா?", என்று புலம்பினார்.

கிழவரும், சிறுவனும், உடனே பதறிப் போய் கழுதையை விட்டுக் கீழே இறங்கினார்கள்; புதியதோர் யோசனை செய்தார்கள். பெரிய மூங்கில் ஒன்றினை எடுத்து, கழுதையை அதில் கட்டி, மூங்கிலின் இரு முனைகளையும் இருவரும், தத்தம் தோள்களின் மீது வைத்துக் கொண்டு கழுதையை சுமந்து கொண்டு சென்றார்கள்.

இவர்கள் ஒரு குறுகலான பாலத்தின் வழியே செல்ல வேண்டியிருந்தது. பாலத்தின் மீது செல்லும்போது, நிலை தடுமாறினார்கள். கழுதை பாலத்திலிருந்து துள்ளி, கீழே ஒடிக் கொண்டிருந்த ஆற்றில் விழுந்தது. இருவரும் செய்வதறியாது திகைத்து நின்றார்கள்.

கதை இத்துடன் முடியவில்லை...

பாலத்தின் மீது வந்து கொண்டிருந்த சிலர், கிழவரையும், சிறுவனையும், கண்டபடி திட்டினார்கள், "கழுதை ஆற்றில் அடித்துக் கொண்டு போகிறது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்களே!", என்று.

சிறுவன் உடனே, பாலத்திலிருந்து, ஆற்றில் குதித்தான். ஆற்றில் நல்ல வெள்ளம். சிறுவனும் அடித்துக் கொண்டு செல்லப்படுகிறான்.

கதை இன்னமும் முடியவில்லை...

உடனே, மக்கள், கூச்சலிட்டார்கள். "கிழவா, பையனை வெள்ளம் அடித்துக் கொண்டு செல்கிறது. என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்?",

கிழவர் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு, பாலத்திலிருந்து குதித்தார், தண்ணிருக்குள். ஆற்று வெள்ளம் அவரையும் அடித்துக் கொண்டு சென்றது.

கதையை இன்னமும் முடிக்க மனமில்லை.

ஐந்து, பத்து நிமிடங்கள் கழித்து, தட்டுத் தடுமாறி, நீந்திக் கரையேறிய கழுதை நிம்மதிப் பெருமூச்சு விட்டது. "அப்பாடி, ஒழிஞ்சாங்க, இரண்டு பேரும்!!".

கதை போதிக்கும் நீதி யாது?

முட்டாள்களிடம் வேலை பார்ப்பதை விட, ஆற்றில் குதிப்பதே மேல்.

Monday, August 22, 2005

அஸ்ஸாம் அனுபவங்கள்

இந்தியாவின் வடகிழக்கிலுள்ள ஏழு சகோதரிகளில் மூத்தவள்தான் அஸ்ஸாம்.
கௌஹாத்தியிலிருந்து கோலாகாட் செல்லும் வழியில் நுமாலிகார் எண்ணை
சுத்திகரிப்பு ஆலை உள்ளது. அனைத்து அஸ்ஸாம் மாண்வர்கள் சங்கமும் (AASU),
ராஜீவ் காந்தியும் செய்து கொண்ட ஒப்பந்ததின் அடிப்படையில் உருவானதால்
"ஒப்பந்த ஆலை" (Accord Refinery) என்ற பெயருமுண்டு இதற்கு. பார்
புகழும் பாரத் பெட்ரோலியம் கார்ப்போரேஷனின் கூட்டு முயற்சிதான் இந்த
நிறுவனம். இங்குதான் எங்களுக்கு ப்ரோஜெக்ட்.

ஹரியும் நானும் சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு 'ஜெட்'டில் பயணித்து,
பின்னர் அங்கிருந்து "இண்டியன் ஏர்" பிடித்து, கௌஹாத்திக்கு பயணித்து,
கோலாகாட்டிற்கு காரில் சென்றோம். கோலாகாட், கௌஹாத்தியிலிருந்து
12 மணி நேரம். எனவே அங்கு போய்ச் சேர காலை மணி ஆறு ஆகி விட்டது.
இப்பொது நுமாலிகார் செல்ல, மீண்டும் வந்த வழியே 2 மணி பயணிக்க
வேண்டும். அகால வேளை பாதுகாப்பு கருதி இந்த ஏற்பாடு.

இப்போது எங்கள் பயணம் டாக்சி மூலம். டிரைவர் பெயர் எதேனும் ஒரு "பரூவா"
வாகவோ, அல்லது "போரா" வாகவோகத்தான் இருக்க வேண்டும், என்றெண்ணிப்
பெயர் கேட்டேன். நான் நினைத்தது சரிதான். அவர் பெயர் பரூவாதான். இது
இரண்டு மணி நேரப் பயணம் என்றாலும், இந்த டாக்சியில் சொல்லத்தக்க
அம்சங்கள் பல இருந்தன. பின் சீட்டில் இருவரும் உட்கார்ந்தோம். என்னுடைய முன்
சீட்டில், அதாவது டிரைவர் சீட்டின் மறுபுறம் ஆதாரம் ஏதுவுமில்லாமல்
தொங்கிக் கொண்டிருந்த சீட்டின் அடியில், ஆறு செங்கற்கள் அடுக்கப்பட்டிருந்தன.
அந்தச் செங்கற்கள் ஏதேனும் காலில் விழுந்து விடுமோ என்றெண்ணிப் பயந்து
கொண்டிருக்கும் போது. சடேறென்று ப்ரேக் அடித்தார், டிரைவர். ப்ரேக்
அடித்தவுடன், ஏர் பேக் (air bag) போல உடனே, முன் சீட்டின் பின்
புறத்திலிருந்து நான்கைந்து ஸ்பிரிங்குகள், தேங்காய் நார் சகிதம் வந்து
எட்டிப் பார்த்து, ஹலோ என்றன. ஸ்பிரிங்குகளைக் கையால் பிடித்துக் கொண்டே
பயணத்தைத் தொடர்த்தோம்.

சிறிது நேரத்தில் மழை தூரத் தொடங்கியது. வைப்பர் என்று சொல்லப்படும்
உதிரிப் பாகம் வேலை செய்ய மறுத்ததால், இந்தப் பரூவா, இடது கையால்
ஸ்டீயரிங்கைப் பிடித்துக் கொண்டே, வண்டியை லாவகமாக ஓட்டிக் கொண்டு,
வலது கையால் ஒரு துணியை எடுத்து, கையை காரின் வெளியே விட்டு,
கண்ணாடியைத் துடைத்துத் தன் திறமைதனை வெளிப்படுத்தினார். இன்னம் சிறிது
நேரத்தில், காரின் குறுக்கே ஒர் ஆட்டு மந்தை குறுக்கிட்டது. டிரைவர்
இப்போது ஹார்ன் அடிக்கப் போகின்றார் என்று எதிர் பார்த்தோம். ஆனால்
மாறாக, அவர் டேஷ் போர்டிலிருந்து ஒரு பச்சை நிற வயரையும், வலது
புறமிருந்து ஒரு மஞ்சள் நிற வயரையும் இழுத்தார். இரண்டு முனைகளையும்
இணைத்துப் பிடித்தார். ஒரு சிறு தீப்பொறியுடன் ஹார்ன் சப்தம் அழகாகக்
கேட்க, ஆட்டு மந்தை வழி விட்டது. அந்தக் கற்காலக் காரை எண்ணிப்
புலம்பிக் கொண்டிருக்காமல், ஒரே ட்ரிப்பில் 350 ரூபாய் கறந்த பரூவா
சாகிப்பின் விடா முயற்சியையும், நம்பிக்கையையும் எண்ணி வியக்காமலிருக்க
முடியவில்லை.

நுமாலிகார் ஆலை அமைந்துள்ள இடம் ஓர் அற்புதமான ஆக்சிஜன் ஆலைக்கு நடுவே.
ஆம், தூய்மையான, சில்லென்ற காற்று சுற்றிலுமிருந்த பச்சைப் பசேலென்ற
தேயிலைத் தோட்டங்களிலிருந்து வந்து கொண்டிருந்தது. டவுன்ஷிப் இருப்பது
ஆலையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தள்ளி, ஒரு குன்றின் மேலே. குன்றின்
மேலமைக்கப்பட்ட இந்த டவுன்ஷிப் அமைத்த கட்டுமானக் கம்பெனி, இந்தப்
ப்ரொஜெக்ட்டிற்காக தேசிய விருது வாங்கியுள்ளது என்று கேட்ட போது
ஆச்சரியம் ஏற்படவில்லை. அவ்வளவு அழகு. இந்த முதல் விஜயத்தில் எங்கள்
வேலை மூன்றே நாட்களில் முடிந்து விட, தற்காலிமாக "டாட்டா, பை பை"
சொல்லி விட்டுத் திரும்பி வந்தோம்.

கிட்டத்தட்ட பத்து மாதங்கள் கழிந்தபின், எடுத்துக் கொண்ட ப்ரொஜெக்ட்டை
முடிக்க இம்முறை மீண்டும் வந்தோம் அஸ்ஸாமுக்கு. இம்முறை
கொல்கத்தாவிலிருந்து, ஜோர்ஹாட்டிற்க்கு விமானம் மூலம் வந்து, பின் ஒரு
மணி நேரம் பயணித்து நுமாலிகார் அடைந்தோம். இப்பொது விருந்தினர்
விடுதியும் கட்டி முடிக்கப்பட்டிருந்தது. இந்தியாவிலேயெ முதன் முறையாக ஒர்
பட்டாம்பூச்சிப் பூங்காவும் அமைக்கப் பெற்றிருந்தது என்றும் கேள்விப்பட்டோம்.

விருந்தினர் விடுதி நன்றாகவே இருந்தது. கான்டீனில் சாப்பிட்டு விட்டு,
காலையில் வேலைக்குச் செல்வோம். திரும்புவதற்கு இரவு மணி ஒன்பது
ஆகிவிடும். நாங்கள் வந்த மறு நாள், விடுதி திரும்பிய போது, அறையின்
கதவில் அறிவிப்பு ஒன்று ஒட்டப்பட்டிருந்தது.

அந்த நோட்டீஸ் டவுன்ஷிப் மேனெஜரால் கையெழுத்திடப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது.
அதிலிருந்த வாசகம் வருமாறு.

"நேற்றிரவு காட்டு யானை ஒன்று டவுன்ஷிப்பிற்குள் வந்து விட்டதாக
நம்பப்படுகிறது. அந்தக் காட்டு யானையைப் பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு
வருகின்றன. அதுவரை, டவுன்ஷிப் வாசிகள் அனைவரும் கவனத்துடன் இருக்கும்படி
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்."

இந்த அறிவிப்பைப் படித்தவுடன் ஒரே த்ரில்லாக இருந்தது. ஊருக்கும் போன்
போட்டுச்
சொன்னதுதான் விவகாரமாகிப் போய்¦விட்டது. உடனே கிளம்பி வந்து
விடும்படி இடை விடாத வேண்டுகோளும், பத்திரமாகத் திரும்பவேண்டி,
பக்கத்துத் தெரு பிள்ளையாருக்கு அபிஷேக ஏற்பாடுகளும் நடந்தன. இரண்டு
நாட்களில் யானை பிடிபட்ட்டதாகக் கூறிய பின்புதான், வீட்டில் அமைதி
ஏற்பட்டது. அஸ்ஸாம் நண்பரொருவர், "இதற்கே இவ்வளவு அலட்டிக்
கொள்கிறாயே!. மூன்று மாதம் முன்பு, புலி ஒன்று பிடிபட்டது. காட்டிலாகா
அதிகாரிகள் வந்து மீண்டும் அதனைக் கொண்டுக்
காட்டில் கொண்டு போய் விடும் வரை, குன்றின் உச்சியில் ஒர் கூண்டில்தான்
வைத்திருந்தார்கள்.

நாங்கள் அனைவரும் போய் போய்ப் பார்த்துவிட்டு வந்தோம்", என்றார். ஓரிரு
நாட்கள் கழித்துக் காரில் ஆலைக்குச் சென்று கொண்டிருந்தோம். டிரைவர் காரை
நிறுத்தி விட்டார் திடீரென்று. என்னெவென்று கேட்டதற்கு, "அங்கே பாருங்கள்.
யானைக் கூட்டமொன்று, சாலையைக் கடக்கின்றது" என்றார். யானைக் கூட்டம்
சென்ற பின் எங்கள் சவாரியைத் தொடர்ந்தோம்.

நான் முன்னமே கூறியபடி இந்த ஆலை இருப்பது, நாகரீகமே இல்லாத ஒரு
வனப்பகுதி. எனவெ, ஒவ்வொரு முறையும் இ-மெயில் பார்க்க வேண்டுமென்றால்
ஒரு மணி நேரம் பயணம் செய்து கோலாகாட் செல்ல வெண்டும். பெரும்பாலான
நாட்கள் ப்ரௌசிங் சென்டர் உரிமையாளர், "இன்டெர்நெட் நஹி ஹை; சர்வர்
டவுன் ஹை" என்று சிரித்தபடியெ கூறுவார். கடுப்போ கடுப்புடன் திரும்ப
வேண்டியிருக்கும். இன்டெர்நெட்தான் வேலை செய்யவில்லை என்றால், டெலிபோன்
நெட்வொர்க்கும் படுத்தோ படுத்தியெடுக்கும் சூழல் அது. இது போதாதென்று,
ஆசு, உல்பா, போடோ, போன்றோர் விடுக்கும் பந்த் வேறு இருக்கும். இந்த
பந்துக்கள், சாதாரணமாக, 12, 24, 36, 48 என்று 12ஆம்
வாய்ப்பாட்டையே, ஒட்டி அமையும். 12 மணி நேர பந்த் என்றால் நாம்
அதிர்ஷ்டசாலிகள். பந்தின்போது, நம்ம ஊர் போல அலம்பல் பண்ணிக்
கொண்டிருந்தால், தோட்டாவினால் உயிர் போகும் வாய்ப்ப்புகள் அதிகம்.

அஸ்ஸாமில், இவர்கள் பேசும் ஆசாமியைத் தவிர, ஹிந்தி மற்றும் பீகாரி
பேசும் மக்கள் அதிகம். டவுன்ஷிப் தவிர, மற்ற இடங்களில் வசிப்பவர்கள்
பெரும்பாலோனோர் ஏழைகளாகவே இருக்கிறார்கள். ஆனால், ஏழையோ,
பணக்காரனோ, எல்லோரும் எதேனுமொரு கலையில் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
வாய்ப்பாட்டு, வாத்யம், கைவேலை என்று ஒவ்வொருவருக்கும் ஒரு பொழுதுபோக்கு
உள்ளது.

ஒரு வாரக் கடைசியில், ஆலையின் டிரெயினிங் ஆபீசர், எங்களை, அவளுடைய
உறவினரின் தேயிலை எஸ்டேட் ஒன்றிற்கு அழைத்துச் சென்றாள். மேகங்கள்
மறைக்கும் அந்தத் தேயிலைத் தோட்டம் மிக ரம்மியமாக இருந்தது. நாங்களும்
சில னிமிடங்கள் தேயிலை பறித்தோம். தோட்டப் புத்துணர்ச்சி கொண்ட
தேனீர் அருந்துவது அந்த சூழலுக்கு ஒர் அருமையான அனுபவம். போன்சாய் மரங்கள்
போன்ற, இந்த தேயிலை செடிகள் ஒவ்வொன்றிற்கும், வயது சுமார் நூறு
இருக்கும்.
டாடா தேயிலை எஸ்ட்டெட்கள் பல இடங்களில் இருந்தன.

அஸ்ஸாம் பற்றிக் கூறிவிட்டு, காஸிரங்கா வன சரணாலயம் பற்றிக்
கூறாமலிருக்கக் கூடாது. ஆனால் கூறவும் முடியாது என்னால். ஏனென்றால்
நான்தான், அங்கு செல்லவேயில்லயே. நேரமின்மையால் இங்கு செல்ல முடியாதது
எனக்குப் பெரிய வருத்தமே. இயற்கைச் சூழலில், யானைச் சவாரி செய்வதும்,
காண்டாமிருகங்களைப் பார்ப்பதும் அரிதான நிகழ்ச்சியல்லவா. இதே மாதிரி
வாய்ப்பு தவற விட்ட வரிசையில் புகழ்பெற்ற "காமாக்கியா" ஆலயத்தையும்
சேர்த்து கொள்ளுங்கள்.

காண்டாமிருகம்தான் பார்க்க முடியவில்லை. குறைந்தது காண்டாமிருக வடிவம்
கொண்ட ஏதெனும் ஒரு நினைவுப் பொருளாவது வாங்கிச் செல்ல வேண்டும் என்று
தீர்மானித்தோம். வழக்கமாக கார் ஓட்டி வரும் அஜீத் அன்று வரவில்லை.
வேறொரு ஒரு டாக்சி பிடித்து, 40 கிலோமீட்டர் பயணம் செய்து,
கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் ஒர் இடத்திற்குச் சென்றோம். மரத்திலான
காண்டாமிருக பொம்மை எல்லொர் கவனத்தையும் கவர்ந்தது. கிட்டத்தட்ட ஐந்து
அல்லது ஆறு கிலோ எடை கொண்ட அந்த கைவினப் பொருளின் விலை ஆயிரம்
ரூபாயாம். ஆனால் பேரம் பேசி ஐனூறு ரூபாய்க்கு
வாங்கி விட்டோம். ஐனூறு ரூபாய்க்கு இது எப்படி சாத்தியமென்று, எங்கள்
முதுகை நாங்களே தட்டிக் கொண்டோம். மறுநாள் வேலைக்கு வந்த அஜீத், இந்த
காண்டாமிருக பொம்மை, தனது வீட்டினருகே இருனூறு ரூபாய்க்குக் கிடைக்கும்
என்றான். மேலும், காண்டாமிருகம், களையாக இல்லை என்றும், மூஞ்சி, நாய்
முகம் போல உள்ளது என்றும் வெறுப்பேற்றினான். இவனக் கூட்டிக் கொண்டு போய்
வாங்கவில்லை, என்று இவனுக்கு 'ஜே' என்று ஸ்ரீகாந்த் சொன்ன போது அனைவரும்
அதனை ஆமோதித்தோம்.

இந்த அஸ்ஸாம் மக்களின் staple food, அரிசி மற்றும் பருப்பு ஆகும்.
ஆனால், பாலும், பால் சார்ந்த பொருட்களான தயிர், மோர், வெண்ணை,
நெய் போன்றவை கிடைப்பதில்லை. காபி, டீ போடக்கூட பால் பவுடர்தான்
உபயோகிக்கின்றனர். காரணம் தெரியவில்லை. பச்சைக் கடுகு கொண்டு
செய்யப்படும் சட்னி பிரபலம். அதனைச் சாப்பிட்ட பிறகுதான், மன்னிக்கவும்,
சாப்பிட முயற்சி செய்த
பின்புதான், "கடுகு சிறுத்தாலும் காரம் போகாது" எண்ற்ற பழமொழியின்
அர்த்தம் புரிந்தது.

இரண்டு மாதங்கள் தங்கிய போதும், அஸ்ஸாம் என்பது இப்படித்தான் என்று
என்னால் கூற முடியவில்லை. எனக்கு ஏற்பட்ட சிறு சிறு அனுபவங்களை மட்டுமே
தொகுத்துக் கூறியுள்ளேன்.

அறிவுரை

"எங்கடா, இந்த செல்வனைக் காணலை. இன்னிக்கும் லீவா"

"ஆமா ஸார். ஊருக்கு போயிருக்கானாம்."

எனக்குப் பலத்த கோபம் வந்தது. இது முதல் முறையல்ல. வெள்ளிக்கிழமை லீவு எடுப்பது இது

மூணாவது முறை. வெள்ளி, சனி, ஞாயிறு என்று லீவு எடுக்க இவனுக்கு என்ன ராஜா வீட்டுக் கன்னுக் குட்டின்னு நினைப்பா?.

"குமார். நீதானப்பா, அந்த செல்வனை வேலைக்குச் சேர்த்து விட்டது. அவன் எங்க இருக்கான்?"

"ஸார். இங்கதான் மல்லிப்பூ நகர்ல.."

"என்னாச்சு அவனுக்கு? ஏன் வேலைக்கு வரலை?"

"என்னமோ, வீட்ல சண்டையாம். காஞ்சீபுரம் போய்ட்டானாம்."

"சரி. சரி. வரட்டும் திங்கக் கெழம. நான் பாத்துக்கறேன்"

திங்கட் கிழமையும் வந்தது. செல்வனும் வந்தான்.

"என்னப்பா, என்ன ஆச்சு? வெள்ளிக்கிழமை வரலை.."

தலையைக் குனிந்தபடி நின்றிருந்தான்.

"வீட்ல சண்டையாமே. ஸார் கோச்சிகிட்டு, காஞ்சீபுரம் போய்ட்டீங்களாமே. உனக்கு மீறி, மீறிப் போனா என்ன வயசிருக்கும். பதினஞ்சா, பதினாறா?

நீ ஆபீஸ¤க்கு லீவு போடறது பிரச்னை இல்லை. ஆனா வீட்ல அம்மா, அப்பா மனசு எப்படிக் கஷ்டப்படும். நீ பாட்டுக்கு ஊருக்குப் போய்ட்டென்னா, நீ எங்கெ போனேன்னு அவங்களுக்கு எப்படித் தெரியும்? இரண்டு நாளா, புள்ளயக் காணோம்னு தவிச்சுப் போயிட மாட்டாங்களா?" என்று அரை மணிக்கு அறிவுரை மழை பொழிந்தேன். (வாத்தியார்னு-தண்ணிர் தண்ணீர்- வீட்ல பட்டப் பேர் கொடுத்ததுக்குத் தகுந்தாப்லே நடக்க வேண்டாமா?)

அரை மணி நேரம் காய்ச்சியும், ஒரு வார்த்தை கூடப் பேசாமல், தலையைக் குனிந்தவாறு இருந்தான்.

"சரி சரி போ. இனிமேல் இப்படியெல்லாம் பண்ணாத"

குமார் மீதுதான் கோபமாக வந்தது. அவனை அழைத்தேன்.

"என்னப்பா ஆள் சேத்திருக்கே. அரை மணி நேரம் அட்வைஸ் பண்ணறேன். வாயைத் தொறக்கக் கூட மாட்டேங்கிறான். சரியான கல்லுளிமங்கன்"

"ஸார். நீங்க சொல்றதைக் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன். அவன் காஞ்சீபுரம் போனது உண்மை. அவன் வீட்ல சண்டை நடந்ததும் உண்மை. ஆனா, சண்டை போட்டது அவன் இல்லை. அவனோட அம்மாதான், அப்பாவோட சண்டை போட்டுகிட்டு, காஞ்சீபுரம் போயிட்டாங்களாம். இவன் போயி, அம்மாவைச் சமாதானப்படுத்திக் கூட்டிகிட்டு வந்திருக்கானாம்."

"யார் போனா என்னப்பா. சொல்லாம கொள்ளாம லீவு போடறது தப்புதானே. அதனாலதான் அட்வைஸ் பண்ணினேன்"

மொழிப் பிரச்னை

மொழிப் பிரச்னை என்றவுடன் ஏதோ, தனித்தமிழ் என்றோ, வழலைக்கட்டி போன்ற கனமான விஷயங்கள் பற்றியோ பேசப் போகிறேன் என்றெண்ணி பயந்து விடாதீர்கள். இது சும்மா நம்ம அனுபவங்கள்தான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் எத்தனை மொழிகள் தெரிகின்றதோ அத்தனை நல்லது என்று தெரிந்திருந்தும், எப்படியோ மற்ற மொழிகள் கற்றுக் கொள்ளும் ஆர்வம் இல்லாமலே, ஒரு ஜென்மம் வளர்ந்து விட்டேன். இதனால் எத்தனையோ சங்கடங்கள் வந்த போதிலும், நினைவலைகளைப் புரட்டிப் பார்க்கின், சுவாரசியமாய் சில விஷயங்கள் புலப்படத்தான்
செய்கின்றது.

தாய் மொழியாம் தமிழும், ஆண்டவர்கள் மொழியாம் ஆங்கிலமும் மட்டுமே தெரிந்த எனக்கு, ஒரு முறை மும்பையில் பயிற்சி. பயிற்சி முடித்த அன்று மாலை, அணுசக்தி நகரிலிருக்கும் எனது மாமா வீட்டிற்ற்கு செல்ல எண்ணினேன். ஆட்டோவைக் கூப்பிட்ட நான், சும்மா இல்லாமல், "அணுசக்தி நகர் சலோ" என்று புலமையைக் காட்டினேன்.

ஆட்டோ டிரைவரும் என்னை சந்தோஷமாக ஏற்றிக் கொண்டான்.

"அணுசக்தி நகர் மே ரிஷ்தேதார் ஹை" என்றான் அவன்.

அவன் சொன்னது எனக்குப் புரியவில்லை. இருந்தாலும் எனது மொழி அறியாமையக்
காட்டிக் கொள்ளாமல், நானும் "ஹை.. ஹை..." என்றேன்.

"இதர் ரோட் சப் சேஞ்ச் ஹோகயா"

"ஹை..ஹை..."

இப்படியே பத்து நிமிடம் சமாளித்து குதிரை ஓட்டிக் கொண்டே வந்தேன்.

"ஆப். கித்னே தின் இதர் ரஹ்தே ஹோ?"

"ஹை..ஹை..."

அவன் சற்று நிதானித்து, "மே துஜே பூச்தே ஹை கி ஆப் கித்னே தின் இதர் ரஹ் சக்தே ஹோ" என்றான்.

சரி இனி மேலும் தாங்காது என்றெண்ணி, "மை ஹிந்தி நஹி மாலும் ஹை" என்று சரண்டர் ஆனேன்.

அவன் படேரென்று, தனது தலையில் ஓங்கி அடித்துக் கொண்டு விட்டு, "க்யார்ரே. துஜே ஹிந்தி நஹி மாலும் ஹை. ****************************************************" என்றான்.

ஆட்டோவை விட்டு இறங்கும்போது, அவன் பார்த்த பார்வை, "ஹிந்தி தெரியாத ஜென்மமே. எதற்கு இங்கு வந்தாய்" என்று கேட்பது போல் இருந்தது. ஒருவேளை, ****** யில் சொல்லியிருப்பானோ.

அடுத்த முறை, பூனா சென்றிருந்தேன். இது ஒரு வித்தியாசமான அனுபவம். பஜ்ஜியானது நானல்லவே. மாலை வேளையில், பொழுது போக, காலாற நடந்து வந்து கொண்டிருந்தேன். எனக்கு பின்னே, ஒரு பத்தடி தள்ளி, ஒரு இளம் தம்பதியினர் நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்கள் நடந்தபடியே, தமிழில் பேசிக் கொண்டு வந்தது என் காதில் துல்லியமாக விழுந்தது. எனது முகத்தை பார்க்காததால், எனது தமிழ்மூஞ்சி, அவர்களுக்குத் தெரியவில்லைபோலும். அடுத்தவர் பேச்சைக் கேட்பது அநாகரீகம் என்றாலும், பொழுதுபோக, அவர்கள் உரையாடலைக்
கேட்பது தவறில்லை என்று, என்னை நானே சமாதானம் செய்து கொண்டு, பேசுவதைக் கேட்டுக் கொண்டே நடந்தேன். மேலும், என்னை ஒரு மனிதனாக எண்ணாமல், ரோட்டில் சத்தமாக பேசி வருவது அவர்கள் தப்புதானே என்றும் எண்ணிக் கொண்டேன். அந்த மனைவியாகப்பட்டவள், கணவனிடம், தனது மாமியார் மற்றும் நாத்தனார் ஆகியோர் பற்றிப்
புலம்பியபடியே வந்தாள். அவனும், வேறு வழியின்றி, அதனை ஆமோதித்துக் கொண்டே வந்தான். சென்சார் செய்யப்பட வேண்டிய சிற்சில சிணுங்கல்கள் வேறு.

ஒரு நாலு மூலை சந்திப்பை அடைய சிறிது தூரம் இருக்கும் முன், அவர்கள் இருவரும் வேகமாக எட்டி நடந்து, என்னிடம் வந்து, "Excuse me. How to go to Venus Theatre?" என்று கேட்டனர். நானும், ஆங்கிலத்தில், "I dont know. I am new to this place" என்று
கூறியிருந்திருக்கலாம். ஆனால், நானோ, தமிழில், தெள்ளத் தெளிவாய், "எனக்குத் தெரியாது. நான் ஊருக்குப் புதுசு" என்றேன்.

அவர்கள் "ஙே" என்று விழித்தனர்.

முதன்முறையாக ப்ரான்ஸ் செல்லும் வாய்ப்பு கிடைத்தபோது, மனைவியயும் அழைத்துச் சென்றிருந்தேன். இருவரும் கிரனோப் என்னும் அழகிய ஊரில், டெம்பாலஜி என்னும் இடத்தில் தங்கியிருந்தோம். டெம்பாலஜி என்பது அப்பர்ட்மெண்ட் போல. வந்த அன்றே ஒரு வயதான பஸ் டிரைவரிடம், ஆங்கிலத்தில் வழி கேட்டு அவர்தம் கோபத்திற்கு ஆளானோம். பிரெஞ்சு
மக்களுக்கு ஆங்கிலத்தில் பேசினால் பிடிக்காது. குறிப்பாக வயசானவர்களுக்கு என்று மறுநாள் ஷாமா சொன்னாள். வெள்ளைக்காரர்கள் (foreigners) எல்லோருமே ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள் என்றெண்ணியிருந்த எங்களுக்கு இது செய்தியாகத்தான் இருந்தது.

டெம்பாலஜியிலிருந்து தினமும், ஒரு முறையாவது இந்தியாவிற்குப் போன் செய்து, குழந்தைகளிடம் பேசுவாள் என் மனைவி. வந்து சேர்ந்த ஒரே வாரத்தில் வாங்கிய அலவன்ஸ் அனைத்தும் ISDக்குப் போய்விடுமோ என்றெண்ணி, டெம்பாலஜி மானேஜரிடம் சென்று, டெலிபோனுக்கு இது வரை எவ்வளவு ஆகியுள்ளது என்று கேட்டு வருவதாகச் சொன்னாள். மறுநாள் மானேஜரைக் கண்டவளுக்குக் கலவரம். ஏனென்றால் அந்த மானேஜர் பெண்மணிக்கு அகவை இருக்கும் அறுபதற்கும் மேல். இவளிடம் ஆங்கிலத்தில் எப்படிப் பேசிப் புரிய வைப்பது என்று வியந்தாள். ஆனால், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல், தான் பயின்ற பரதக்கலையின் அபிநயங்களை எடுத்து விடுவது என்று தீர்மானித்தாள்.

அபிநயப் பிரயோகம் செய்து கொண்டே, "my.. children..abroad... daily.. telphone..bill..." என்று ஆங்கில வார்த்தைகளையும் சின்க்ரொனைஸ் செய்து, இறுதியாக "கொபியான்?...கொபியான்?" என்றாள். (கொபியான் என்றால் எத்தனை, ஹௌ மச், கித்னே..) அந்த வயதான மேனேஜரோ உடனே, "You want to know how much you have spent on the telephone bill. Why dont you ask properly?" என்று நெத்தியடி போட்டாள்.

"உங்களுக்கு இங்கிலீஷ் தெரியும் என்று எனக்கு எப்படித் தெரியும்", என்று பின்னர் வழிந்தாள்.

சரி, இனிமேல் உஷாராக இருக்க வேண்டுமென எண்ணி, மெய்லோன் சென்றபோது, ஒரு நடுத்தர வயது ஆசாமியிடம் வழி கேட்கும் முன், "Can you speak English?" என்றோம். அந்தக் குசும்பு பிடித்த மனிதன், "Yes. I can speak; But I will get pimples" என்றான்.

அப்புறம். அந்த 'இண்டிக்கி' விஷயம் சொல்லி முடித்து விடுகிறேன். எனது மனவி சில வருடங்கள் ஒரு கிண்டர் கார்டன் பள்ளியில் டீச்சராக இருந்தாள். குழந்தைகளைக் கவனிக்க, ஒவ்வொரு வகுப்பிற்ற்கும் ஒரு ஆயாவும் உண்டு. பள்ளி திறந்த புதிதில், ஒவ்வொரு குழந்தையும் ஏதோவொரு காரணத்திற்காக அழ ஆரம்பிப்பது வழக்கம்.

இப்படித்தான் ஒரு நாள், சுதீர்பாபு, "இண்டிக்கிப் போத்தானு" என்று அழ ஆரம்பித்து விட்டான். உடனே, இவள், ஆயாவைக் கூப்பிட்டு, "ஆயாம்மா. இந்த சுதீர்பாபுவை, டாய்லெட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய்விட்டு வா" என்றாள். டாய்லெட் போய்விட்டு வந்த, சுதீர்பாபு, சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பிறகு சில நிமிடங்களில் மீண்டும், "இண்டிக்கிப் போத்தானு" என்று அழத் தொடங்கி விட்டான்.

"ச்சீ. சும்மாயிரு. இப்பத்தானே, இண்டிக்கி போயிட்டு வந்தே. எத்தனை முறை இண்டிக்கி போவே." என்று அதட்டினாள்.

ஆயாம்மா உடனே, "டீச்சர். அந்தப் பையன் தெலுங்கிலே பேசறது உங்களுக்குப்
புரியலையா? 'இண்டிக்கிப் போத்தானு'ன்னா, 'வீட்டிக்குப் போறேன்'னு அர்த்தம்." என்றாள்.

'நல்லவேளை. சுதீர்பாபுவின் அப்பாவிடம் ஏதேனும், உளராமல் இருந்தோமே' என்று னிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

Sunday, August 21, 2005

இன்ஸ்பெக்டர் வர்றாருங்கோ

அந்தக் காலத்தில், பள்ளிக்கூட இன்ஸ்பெக்ஷன் என்பது மாணவர்களுக்கு தீபாவளிக்கு அடுத்தபடியான ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும். ஆசிரியர்களுக்கும் கூட. ஒரே வித்தியாசம் அவர்கள் பிதறலை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள். மற்றபடி பள்ளிக்கூடத்தில் உள்ள அனைவரும் எக்சைட் ஆகி, எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று திமிலோகப்படும் நேரமது.

இன்ஸ்பெக்ஷன் தொடங்க ஒரு வாரம் முன்னரே, பள்ளி களை கட்டி விடும். வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு வெள்ளை அடிக்கப்படும். அடுப்புக்கரி, ஊமத்தை இலை கொண்டு அரைக்கப்படும் கரும்பலகைக்குண்டான வர்ணக்கலவை (கரி), கரும்பலகையில் பூசப்படும். இந்த வேலையை, 'சி' பிரிவு மாணவர்கள், 'பி' பிரிவு மாணவர்களுக்கு 'அவுட் ஸோர்ஸிங்' செய்வதும் உண்டு. பொதுவாக மாணவர்கள் தாங்களே குழுக்களாக பிரிந்து கொண்டு, ஒவ்வொரு குழுவும்
ஒவ்வொரு வேலையச் செய்யும். ஒரு கோஷ்டி சார்ட் தயார் செய்யும். அடுத்த கோஷ்டி, மண்ணைப் பிசைந்து, தங்கள் திறமைகளைக் காட்டும். சட்டி, பானை, அம்மி, ஆட்டுக்கல், வீடு, போன்ற மினியேச்சர் மாடல்கள் செய்து அசத்துவார்கள். இவை வகுப்பிலுள்ள உத்தரத்தின்
மீதோ, கட்டுரை அலமாரியின் மீதோ வைக்கப்பட்டிருக்கும்.

இது தவிர, பல்வேறு மாலைகள் செய்யப்படும். இதற்கான் முக்கிய மூலப்பொருள் சிகரெட் பாக்கெட் அட்டையும், அதிலுள்ள வெள்ளிக் காகிதமுமேயாகும் (aluminium foil). குறிப்பிட்ட மாணவர்கள் இதனை ஒரே நாளில் மொபலைஸ் பண்ணிக் கொண்டு சேர்க்கும் திறனுள்ளவர்கள். மாணவர்கள் சரிகை காகிதத்தைச் உருட்டிக் கொடுக்க, மாணவிகள் ஊசி நூல் கொண்டு கோர்க்க, மாலைகள் உருவாகும் காட்சி பார்க்க நன்றாக இருக்கும்.

அடுத்தபடியாக சிகரெட் பாக்கெட் அட்டையக் குறுக்காக, சிறிய துண்டுகளாக வெட்டி, அவற்றை இரண்டாக மடக்கி, ஜிக்ஸா முறையில் கோர்க்கப்படும் மாலைகள் விஷேசமானவை. சிறிய வகுப்பு மாணவர்கள், ஸிஸர்ஸ், சார்மினார் பாக்கெட்டில் மாலைகள் பண்ண, எட்டாம்ப்பு மாணவர்கள் மட்டும் பாஸிங் ஷோ, னார்த் போல் அட்டைகளில் கலக்குவார்கள். சிகரெட் பாக்கெட் அட்டை மாலைகள், காந்தி, யேசு, புத்தர் படங்களுக்கு நேர்த்தியாக மாட்டப்படும். அரிசிப்பொரியிலும் மாலைகள் செய்யும் வழக்கமும் உண்டு. சில மாணவர்கள், வார்னிஷ் காகிதம்
கொண்டு, காற்றினால் இயங்கும் விசிறி, தவளை, பந்து, ஆகாய விமானம், ராக்கெட் போன்ற ஒரிகாமி ஐட்டங்களும் செய்வார்கள்.

இன்ஸ்பெக்டர் வரும்போது யாரிடம் கேள்வி கேட்கப்படும் என்றும், யார், யார் கையைத் தூக்கவேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டு, செவ்வனே அமல்படுத்தப்படும். சொதப்பிய மாணவர்கள், ஆசிரியர்கள் என்ன செய்வாரோ என்றெண்ணியும், சொதப்பிய ஆசிரியர்கள், தலைமயசிரியர் என்ன சொல்வாரோ என்றெண்ணியும் அஞ்சி அஞ்சி சாவர். ஒவ்வொரு இடைவேளையின் போதும், 'உங்களுக்கு முடிசிருச்சாப்பா', கேட்கப்படும்.

இந்த காலத்தில் பள்ளிகளில் இன்ஸ்பெக்ஷன் நடக்கின்றதா என்று தெரியவில்லை. அல்லது கவனிக்கப்பட்டு விடுகின்றனரா என்றும் புரியவில்லை. ஆனால், இன்ஸ்பெக்ஷன் நடக்காவிட்டால், ஒரு பரபரப்பான விஷயத்தை இழக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

இரத்த தானம்

"ஸார். சீக்கிரம் கிளம்புங்க. கேப் ஏற்பாடு பண்ணிருக்காங்க பர்ஸ்ட் எய்ட் சென்டெரிலேர்ந்து."

அவசரமாக உடை மாற்றிக் கொண்டு வந்து ஏறினேன் அந்த அம்பாசடர் காரில். ஏற்கெனவே காரில் மூன்று AB+ உட்கார்ந்திருந்தனர். கார் கீழ்ப்பாக்கம் ஆஸ்பிட்டலை நோக்கி விரைந்தது. பவர் பிளான்ட்டில் வேலை செய்து கொண்டிருந்த முருகேசனுக்கு ஆக்சிடெட்டாம். வெல்டிக் செய்து கொண்டிருந்த மணுசன், கால் தவறி கான்டென்சேட் டாங்கில் விழுந்து விட்டானாம். அவனுக்கு இரத்த தானம் செய்யவே இப்போது சென்று கொண்டிருக்கின்றோம்.

இப்போதுதான் வாழ்க்கையில் முதல் முறையாக இரத்த தானம் செய்கின்றேன். என்னுடைய இரத்தம் அந்த மணுசனைக் காப்பற்ற வேண்டுமே என்று வேண்டிக் கொண்டே, நாலாவது மாடியில் இருக்கும் அந்த இரத்த வங்கியில் நுழைகின்றேன். கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து விட்டு என் முறை வரும் வரை காத்திருக்கின்றேன். இரத்த அழுத்தம் பரிசோதிக்கப் பட்ட பின், கட்டிலில் படுக்கும்படி பணிக்கப்படுகின்றேன். இருபது வருடங்களுக்குப் பிறகு, ஊசி கையைத் துளைக்கின்றது. ப்ளாஸ்டிக் பையில் சொட்டு சொட்டாக எனது இரத்தம் சேகரிக்கப்படுகின்றது. சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின் ஒரு டம்ப்ளர்
க்ளூக்கோஸ் தண்ணீரும், சில பிஸ்கெட்டுகளும் சாப்பிட்டபின், காரிலே வீடு வந்து சேர்ந்தேன்.

சாயங்காலம் மணி ஐந்து இருக்கும். அன்பு சுரேஷிடமிருந்து போன்.

"ஸார். விஷயம் கேள்விப்ப்ட்டீங்களா? முருகேசன் போய்ட்டானாம். ".

"என்னது? போய்ட்டானா? என்னப்பா சொல்றே. கார்த்தாலதானே இரத்தம் கொடுத்துட்டு வந்தேன்."

"என்ன பண்றது ஸார். பாவி கொடுத்து வச்சது அவ்வளவுதான். 80% சிவியரிட்டி இல்லையா? அப்புறம் முக்கியமான விஷயம். நாளைக்கி அந்த இரத்த வங்கியிலே உங்களை வரச் சொல்லியிருக்காங்க ஸார்."

"என்ன அன்பு. எதாவது பிரச்சினையா?"

"ஆமாம். உங்களையே நேரில் வரச் சொல்லியிருக்காங்க"

மறு நாள் எனக்கு ஆப்தான். குழப்பத்துடன் இரத்த வங்கி சென்ற என்னை, இரத்தம் எடுத்த ஸிஸ்டர் புன்முறுவலுடன் வரவேற்றாள்.

"ஸார். பாவம். நேத்திக்கு அட்மிட் ஆன உங்க கம்பெனி எம்ப்ளாயீ இறந்துட்டார். உங்க இரத்தம் அவருக்குக் கொடுக்க முடியலே. உங்க இரத்தம் வேற குரூப் ஸார். பேஷண்ட்டோட குரூப் AB+VE. ஆனா உங்களுது வந்து A-VE. இது ரொம்ப ரேர் குரூப் ஸார். இதை வேற ஒரு பேஷண்ட்டுக்கு கொடுத்துட்டோம். இத சொல்றதுக்குத்தான் நேரிலேயே வரச்சொன்னோம். உங்க சந்தேகத்திற்கு வேணும்னா னீங்க இன்னொரு முறை ப்ளட் டெஸ்ட் பண்ணிக்கோங்க ஸார்"

அதிர்ச்சியாக இருந்தது. முருகேசனைக் காப்பற்ற முடியவில்லையே என்று ஒரு புறம் வருத்தம். மறு புறம் தவறாக எனது இரத்தம் AB+VE என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கின்றேன். ஐந்து வருஷமாக எனது இரத்தம் AB+VE என்றல்லவா ஐடென்டி கார்டை மாட்டிக் கொண்டு அலைந்திருக்கிறேன்.

"ஸிஸ்டர். O+VEவோ AB+VEவோ உள்ளவர்களை நிறை கொடையாளர்கள்னு (Universal Donors)சொல்றாங்களே. அப்புறம் எதுக்கு இந்த க்ரூப் வேணும்; அந்த க்ரூப் வேணும்னு கேக்கறீங்க?"

"ஸார். அதெல்லாம் எனக்குத் தெரியாது. டாக்டரிடம் கேளுங்க" என்றாள்.

சரிதான். கேட்க வேண்டிய இடத்தில் அல்லவா கேட்க வேண்டும்.

தவறாக ப்ள்ட் க்ரூப்பை சொன்ன அந்த அரும்பாக்கம் ஆஸ்பிடல் மீதும், அதை சோதனை செய்யாமல் ஐடென்டிட்டி கார்ட் கொடுத்த பெர்ஸனல் டிபார்ட்மென்ட் மீதும் கோபம் வந்தது. போய்க் கத்தி விடலாமென்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் ப்ரொமோஷன் எதிர்பார்க்கும் இந்த நேரத்தில் எதற்கு வம்பு என்று அடக்கியே வாசிக்க முடிவு செய்தேன். அடுத்த விடுமுறையின்போது மீண்டும் இரத்தத்தைப் பரிசோதித்து புதிய ஐடியும் பெற்றேன்.

"ஸார். வணக்கம். வாழ்த்துக்கள். A-VEவாமே. இனிமேல் தான் உங்களுக்கு நிறைய டிமாண்ட்." டிராகுலா தேவராஜ் போன் செய்து வாழ்த்தினான். இருபத்து நாலு மணி நேரமும், இரத்த தானம் பற்றி சிந்தித்து, நாற்பத்தெட்டாவாது முறையாக இரத்த தானம் கொடுத்த ஜீவனுக்கு டிராகுலா என்று பட்டப் பெயர். நம்ம மக்களைத் திருத்தவே முடியாது.

இரண்டே மாதத்தில் மீண்டும் இரத்த தானம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது தமிழ்நாடு ஆஸ்பிடலில். போய் இரத்தம் கொடுத்து விட்டு அரை மணியில் வந்து விடலாமென்றால், அது நடப்பதாகத் தெரியவில்லை. அடையாறிலிருந்து அவர்களது பஸ்ஸில் கிளம்பி, சோழிங்கனல்லூர் சென்று திரும்ப நான்கு மணி நேரத்திற்கு மேலாகி விட்டது. இரத்தம் அவ்வளவு முக்கியமென்றால், ஆம்புலன்ஸ் வேனை, வீட்டிற்கே அனுப்பிச் செய்து இரத்தம்
எடுத்துக் கொள்ளச் சொல்லலாமே என்று அடையார் டைம்ஸ் பத்திரிக்கைக்கு ஆசிரியர் கடிதம் எழுத வேண்டுமென நினைத்துக் கொண்டேன். இரத்தம் பெற்றுக் கொண்ட அகர்வாலின் மகனிடமிருந்து நன்றிக் கடிதம் வந்தது மலேஷியாவிலிருந்து. சில நாட்கள் கழ்¢த்துதான் என்னுடைய இரத்த்ம் சிவப்பு அணுக்கள். வெள்ளை அணுக்கள், ப்ளாஸ்மா என்று பிரிக்கப்பட்டு மூன்று நான்கு பேர் பயனடைந்தார்கள் என்று அறிந்து மகிழ்ந்தேன். மற்றபடி வேறு
விசேஷமில்லை.

கிடைப்பதற்கரிய க்ரூப் என்பதால், (AB-VE தான் எல்லாவற்றையும் விட மிக அரியதென்றாலும் எல்லா -VE ப்ளட் க்ரூப்பும் அரிதுதான்.) ஒவ்வொரு நாற்பது நாளைக்கும் ஒரு முறையும் இரத்த தானம் செய்வது வாடிக்கையாயிற்று. ஆனால் ஒரு நாள் என்னுடைய மகனுக்கே நான் இரத்தம் கொடுக்க வேண்டியிருக்கும் என்று எண்ணியதில்லை.

சாதாரணக் காய்ச்சல் போலத்தான் இருந்தது சின்னவனுக்கு. ஆனால் இரண்டாம் நாள் 101, 102 என்று எறிக் கொண்டேயிருந்தது. இந்திரா நகரிலுள்ள நர்சிங் ஹோமில் அட்மிட் செய்தோம். மூன்றாம் நாள் ஹீமோக்ளோபின் சதவிகிதம் கிடுகிடுவென குறைய ஆரம்பித்து விட்டது என்றும், உடனடியாக ரத்தம் கொடுக்க வேண்டும் என்று தலைமை டாக்டர் கூறினார். அப்போதுதான்,
அவன் இரத்தம் என்ன க்ரூப் என்று பரிசோதிக்கப்பட்டது. அது A2-VE என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. நெருங்கிய உறவினர் கொடுப்பதே நல்லது என்று கூறினார்.

"என்னுடையது A1-VEதான். நான் கொடுக்கலாமா?"

"தாராளமா. ஆனா, அதுக்கு முன்னாடி மேட்சிங் பார்க்கச் சொல்லறேன்."

பொருத்தம் பார்க்கப்பட்டு, என்னுடைய இரத்தம் கொடுக்கலாமென்று முடிவு செய்யப்பட்டது.

"நுங்கம்பாக்கத்தில் இருக்கு ப்ளட் பாங்க். அங்கே போய் எடுத்து ப்ளட் எடுத்துட்டு செக் பண்ணிக் கொண்டு வந்து விடுங்க"

அடையாறிலிருந்து கிளம்பி, நுங்கம்பாக்கத்தில் உள்ள இரத்த வங்கிக்குச் சென்றேன். அரை மணியில் என்னுடைய இரத்தத்தை எடுத்து அதற்குண்டான பிரத்யேகமான பையில் போட்டுக் கொடுத்தார்கள். என் மகனுக்கு, என் இரத்தத்தை நான் கொடுக்க, ஐனூறு ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது. டெஸ்டிங் சார்ஜாம்.

யமஹா பைக்கில், என்னுடைய இரத்தப் பையை எடுத்து கொண்டு நர்ஸிங் ஹோம் நோக்கி விரைந்தேன். வரும் வழியில் கொட்டும் மழை வேறு. என்னுடைய வருகையை அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தனர். உடனடியாக இரத்தம் கொடுக்க ஏற்பாடு செய்தனர்.

"இப்ப கொடுக்க ஆரம்பிச்சுட்டோமே. இனிமேல் கவலையில்லையே டாக்டர்?"

"பார்க்கலாம். நான் மத்தியானம் ரவுண்ட்ஸ் வருவேன். அப்பப் பார்க்கிறேன்."

குழந்தை எப்படி இருக்கிறான் என்று பார்க்கப் போன மனைவிக்கு அதிர்ச்சி.

"ஐயையோ. இங்கே வாங்களேன். இவன் மூஞ்சியிலே பாருங்களேன். சிவப்பு, சிவப்பா. முதுகுலியும் இருக்கு. ஸிஸ்டர். இதப் பாருங்க. ஏன் இப்படி?" திட்டு திட்டாக உடம்பு முழுவதும் சிவப்பு பேட்ச்.

"கொசுக்கடிதான் மேடம். வேற ஒண்ணும் இருக்காது."

அதற்குள் தலைமை டாக்டர் என்னவோ பிரச்சினை என்று ஓடி வந்து பார்த்தார்.

"உடனே, அந்த இரத்தம் கொடுக்கிறதை நிறுத்துங்கம்மா. இரத்தம் மிஸ்மேட்ச் ஆகி ஒத்துக்கலை."

"எப்படி டாக்டர்? மேட்சிங்தானே பார்த்தோமே."

"சொல்ல முடியாது. சில சமயம் இப்படித்தான் ஆகும்."

இப்படியாக இந்த முறை, எனது மகனுக்கு இரத்தம் தேவைப்பட்டும் கொடுக்க முடியாமற் போனது.

புது வீட்டிற்கு குடி வந்த அன்று, எல்லா வேலைகளையும் முடித்து, டிவிக்கும் இணைப்பு கொடுத்துவிட்டு, படுக்கைக்குப் போக எண்ணிய போது டெலிபோன் ஒலித்தது.

"ஸார். எம்பேர் ராம்தாஸ். எப்படியோ உங்களை போனிலே பிடிச்சுட்டேன் ஸார். அக்கா பொண்ணு, இங்க மலர்ல அட்மிட் ஆகியிருக்கா ஸார். கார்த்தால ஆபரேஷன். A1-VE ப்ளட் ஸார். யாருமே கிடைக்கலை. கடைசியா உங்க நம்பரை புடிச்சேன்."

"இப்போ என்னங்க பண்ண முடியும்? கார்த்தாலே 6 மணிக்கு வரேன்."

"இல்லை ஸார். இப்பவே வரணும். ப்ளட் தயாரா இருக்குன்னு சொன்னாத்தான், கார்த்தாலே பெரிய டாக்டர் வருவாராம்"

"சரி. இன்னும் பத்து நிமிஷத்திலே அங்கே வரேன்"

"என்னங்க. மணி பதினொண்ணாகுது. இது ஜெனியூன் கால்தானா? பாத்துக்குங்க."

"எல்லாம் கரெக்டாத்தான் இருக்கும். வேணுன்னா கார்லேயே போறேன்"

மலரில் நான் வந்து இறங்கும் போது மணி பதிணொண்ணரை.

"ஸார். நாந்தான் ராம்தாஸ். போன் பண்ணிப் பேசினது நாந்தாங்க. பாருங்க. அக்கா பொண்ணு. பத்து வயசுதாங்க. தாலசீமியா இருக்குது. இப்ப அப்பெண்டிஸ்ன்னு வேற சொல்றாங்க."

"கலை, ஸாருக்கு வணக்கம் சொல்லு. ஸார். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. டாக்டர் வந்துகிட்டே இருக்காராம்."

சுமார் 45 னிமிடங்கள் கழித்தே டாக்டர் வந்தார். நாள் பூரா நாய் மாதிரி அல்லாடிவிட்டு, நடு இரவு 12.30 மணிக்கு மலரின் நான்காவது மாடியில் படுத்துக் கொண்டு இரத்த தானம் செய்து கொண்டிருக்கின்றேன்.

எதற்காக இப்படி செய்து கொண்டிருக்கின்றேன், தேவையா, என்றெல்லாம் எண்ணியபடியே
உடைகளை சரி செய்து கொண்டு கிளம்பத் தயாரானேன்.

திடீரெனெ ராம்தாஸ் வந்து காலில் சாஷ்டாங்கமாய் விழுந்தான். எப்படியும் என்னை விட சுமார் பத்து வயசாவது பெரியவனாக இருப்பான் (ர்). எனக்கு என்னாவோ போலாகி விட்டது. அவனை(ரை) எழுப்பி சமாதானப்படுத்துவதற்குள் போதும் பொதும் என்றாகி விட்டது.

"இல்லை ஸார். நீங்க தெய்வம்....." என்று அவன்(ர்)பாட்டுக்கு உணர்ச்சிவசப்பட்டு ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான்(ர்).

தானத்தில் சிறந்தது இரத்த தானம் என்பதை அன்றுதான் உணர்ந்து கொண்டேன்.

கடைசியாக ஒரு எபிசோட். பையனது பள்ளியில் இரத்த தான முகாமாம்.

"அப்பா, அப்பா, வெள்ளிக் கிழமை எங்க ஸ்கூல்லில் ப்ளட் டொனேஷன் கேம்ப். நீங்க வந்து ப்ள்ட் கொடுங்கோப்பா. யாருமே அவங்க அப்பாவைக் கூட்டிண்டு வர மாட்டாங்க. நான் என்னோட ப்ரெண்ட்ஸ் எல்லார்கிட்டேயும் சொல்லி விட்டேன், எங்க அப்பா கண்டிப்பா வருவாங்கன்னு."

"கண்டிப்பா வரேண்டா. இண்ணொண்ணு தெரியுமோ. இது வரைக்கும் 24 தடவை கொடுத்து விட்டேன். உங்க ஸ்கூல்ல கொடுத்தா, குவார்ட்டர் செஞ்சுரி."

வெள்ளியன்று பையனுடன் பள்ளி சென்றேன். அவனுக்கு ஒரே பெருமை. எனக்கும் சற்றே.

முதலில் மெடிகல் செக்கப் செய்ய அழைக்கப்பட்டேன்.

"ஸார். 24 முறை இரத்தம் கொடுத்திருக்கிறீங்க போலிருக்கு. கடைசியாக எப்போ கொடுத்தீங்க?" என்றார், அந்த ஹவுஸ் சர்ஜன் போன்றிருந்த இளம் டாக்டர். ஐடி கார்ட், டாக்டர்.பிரேம் என்றது.

"ப்ளட் கொடுத்து, ஒரு வருஷத்திற்க் மேலா ஆச்சு டாக்டர். ஆபீஸ் வேலை டைட்டாக இருக்கு"

"பை தி வே, நீங்க எதாவது மெடிசின்ஸ் சாப்ப்பிடுற்றீங்களா?"

"ஆமாம் டாக்டர். ஒரு சின்ன ப்ராப்ளம். அதுக்காக ஆறு மாசமா, சின்ட்ரோல் சாப்பிடறேன்."

"அதான பார்த்தேன். எனக்கு ஸ்லைட்டா டவுட் இருந்தது. நீங்க இனிமே இரத்தம் கொடுக்க வேண்டாம்."

"னிஜமாகவா?"

"னெறைய கொடுத்துவிட்டீங்களே. இனிமே உங்க ப்ரெண்ட்ஸைக் கொடுக்கச் சொல்லுங்க"

"ஓகே. நோ ப்ராப்ளெம். தாங்ஸ். வருகிறேன்."

பயங்கர ஏமாற்றத்துடன் காரிடாரில் வந்து கொண்டிருந்த போது, திடீரென்று எதோ தோன்றியது. ப்ள்ட் எடுத்துக் கொண்டிருந்த இடத்திற்கு ஒடினேன்.

"ஸிஸ்டர். இப் யு டோண்ட் மைண்ட், ஒரே ஒரு ப்ளாஸ்டர் கிடைக்குமா?"

ஸிஸ்டர் கொடுத்த அந்த சிறிய வட்ட ப்ளாஸ்டரை, பையன் பார்ப்பதற்குள் அவசரமாக புஜத்தில் ஒட்டிக் கொண்டேன்.

Saturday, August 20, 2005

ஸ்ரீராம நவமிக் கச்சேரி

"ஸார், ஆதித்யா ரொம்ப நன்னா பாடறான். அவனை இந்தவச சக்கரை அம்மன் கோயி¢லே, ஸ்ரீராம நவமிக் கச்சேரியிலே பாட கேட்டிருக்கா. சரின்னு சொல்லிட்டேன்." என்றார் பாட்டு வாத்யார்.

ஸ்ரீராம நவமிக் கச்சேரி என்று காதில் விழுந்தவுடன், நினைவு முப்பது, முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு ஓடத் தொடங்கியது. அப்பா ஒரு பன்முகத்திறன் கொண்டவர். தமிழ்ச் சங்கம், இஸ்கஸ், ரோட்டரி கிளப் என்று எல்லா ஸோஷியல் நடவடிக்கைகளிலும் ஈடுபாடு கொண்டவர். இருந்தபோதும் அவர் அதிக ஈடுபாடு கொண்டது ஸ்ரீராம நவமிக் கமிட்டியில்தான். அவர்தான் உப தலைவர். எழுபதுகளில் மேட்டுப்பாளையத்தில் ஸ்ரீராம நவமிக் கச்சேரிகளை அப்பாவும், வரதராஜ ஐயங்காரும்தான் (தலைவர்) சேர்ந்து ஆரம்பித்தனர் . முட்டைக் கோஸ்
கிலோ மூணு ரூபா, உருளைக் கிழங்கு கிலோ நாலு ரூபா, சஙகீதம் கிலோ என்ன விலை என்று கேட்கும் நகரில் இப்படி ஒரு முயற்சி எடுத்தது ஒரு துணிச்சலான விஷயம்தான்.

குருட்டு முனையில் பெருமாள் கோயில் கொண்ட அந்த அக்ரஹாரத்தில் ரோட்டை மறித்து போடப்படும் மேடையில் கச்சேரிகள் நடக்கும். இரசிகர்கள் உட்கார, மேடை முன்பாக ஜமக்காளம் விரித்திருக்கும். ஆண்கள் யாராக இருந்தாலும் அந்த ஜமக்காளத்தில்தான் உட்கார வேண்டும். அது யு.பி.எல் ஜி.எம்மாக இருந்தாலும் சரி. டேன் இண்டியா டைரக்டராக இருந்தாலும் சரி. சிறிய ஊர் என்றாலும், இரசிகர்கள் குறைவு என்றாலும் பாட வருபவர்கள் சாதாரண ஆட்கள் இல்லை. பி.வி.ராமன், பி.வி.லஷ்மண் சகோதரர்கள், மகாராஜபுரம், வோலேடி, னேதுனூரி, மதுரை சோமு, லால்குடி, உமையாள்புரம், வேலூர் ராமபத்ரன் போன்ற பெரும் புள்ளிகள்தான் வந்து பாடுவார்கள்/வாசிப்பார்கள். ஊட்டி, மைசூர் செல்ல இருக்கும்
வித்வான்களும் இடெனரரியை மாற்றி இவ்வழியே செல்வது வழக்கம்.

அப்பா, வித்வான்களை சாயங்காலமே வீட்டிற்கு அழைத்து வருவார். இட்லி, கேசரி, காபி மற்றும் அரட்டை முடிந்த பின் எட்டு மணி வாக்கில் கச்சேரிக்குச் செல்வார்கள். மற்ற ஊர்களில் தெரியவில்லை. மேட்டுமாநகரிலே நடைபெறும் இந்த இரவு நேர ஸ்ரீராம நவமிக் கச்சேரிகள்,
சாவகாசமாக சுமார் 9 மணியளவில் ஆரம்பித்து 12 அல்லது மறுநாள் காலை 1 மணி வாக்கில் முடியும்.

அப்பா வித்வான்களோடு கிளம்பிய பின், நாங்கள் அம்மாவுடன் கச்சேரிக்குக் கிளம்புவோம். நாங்கள் என்றால், நானும் எனது சகோதரிகள் மூவரும். அவர்கள் ஒரே சந்தோஷத்துடன் கிளம்புவார்கள். வெகு நாட்கள் கழித்துச் சந்த்திக்க இருக்கும் தோழிகளை எண்ணி. ஆனால் எனக்கு யாரும் நண்பர்கள் கிடையாது அங்கே. எனவே வேறு வழியில்லாமல், களத்திற்கு கூட்டிச்
செல்லப்படும் பலி ஆடு போ அழைத்துச் செல்லப்படுவேன். கச்சேரியின் இறுதியில் அப்பா கொடுக்கும் வோட் ஆப் தாங்க்ஸ் விஷேஷமானது. அது வெறும் நன்றியுரை மட்டுமல்லாது, ஒரு பாராட்டு விமர்சன உரையாகவும் இருக்கும். அதனைக் கேட்கவே பெரும்பாலான வித்வான்கள் இங்கு வந்து பாடுவதாக அப்பாவின் நண்பர் முத்துக் கிருஷ்ணன் கூறுவது உண்டு. மேடையின்
முன்பாக உள்ள ஜமக்காளத்தில் முதல் வரிசையில் அப்பா உட்காருவார். அம்மா மற்றும்
சகோதரிகள் மேடையின் இடது பக்கம் இருக்கும், துரை மாமா வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருப்பார்கள். நான் அங்கே போக முடியாது. பெண்டுகள் கூட்டம். எனவே அப்பா பக்கத்தில் போய் உட்காருவேன்.

பாடகர் யாராக இருந்தாலும், வாதாபி கணபதிம் பஜே என்று ஆரம்பித்தவுடன் வந்து விடும் எனக்கு முதல் கொட்டாவி. அடுத்த கொட்டாவி வரும் முன்னே, என்னை நானே டைவர்ட் பண்ணிக் கொள்ள எண்ணி, திண்ணையத் திரும்பிப் பார்ப்பேன். அவர்கள் என்னைக் கேலி செய்து ஏதோ ஒரு ஜோக் சொல்லிக் கொண்டு சிரித்துக் கொண்டிருப்பார்கள். முதல் பாட்டின் அனுபல்லவி வரை கூடத் தாங்காது எனக்கு. அப்பேர்ப்பட்ட ஔரங்கசீப், ஐயாவாள். வலது பக்கத் திண்ணையில் ஒரு புரம் சுவாமி படங்களும் விக்கிரகங்களும். மற்றொரு பக்கம் உள்ள காலித் திண்ணையில் எனக்காகவே ஜமக்காளங்கள் குமிக்கப்பட்டு, "வா, வா, வந்து தாச்சுக்கோ" என்று
கெஞ்சியபடி இருக்கும்.

ஜமக்காளங்கள் நடுவே போய் ஒரு அற்புதமான தூக்கம். நல்ல வேளை; குறட்டை ஒன்றும் பலமாக இருக்காது. சுமார் ஒரு மூணு மணி நேரம் கழித்து பாடகர், "பவமான" என்று மங்களம் பாடும்போது, தங்கையால் நான் எழுப்பப்படுவேன். "பாவமான" என்று என்னைப் பற்றித்தான் பாடுகிறாரோ என எண்ணிக் கொள்வேன். மங்களம் பாடிக் கொண்டிருக்கும்போதே, க்ருஷ்ணமூர்த்தி ஸாஸ்திரிகள், மணியடித்து கர்ப்பூர ஆரத்தி எடுத்துக் கொண்டிருப்பார். நானாவித சப்தங்களும் ஒலித்துக் கொண்டிருக்கும் அந்த அர்த்த ராத்திரியில், எங்கே இருக்கிறோம்
என்று கூடத் தெரியமல், கடுப்போ கடுப்புடன் எழுந்திருக்க வேண்டியிருக்கும்.

சொல்ல மறந்து விட்டேனே. எங்கள் வீட்டிற்கும் கச்சேரி நடக்கும் அக்ரஹாரத்திற்கும், உள்ள தூரம் எவ்வளவு என்று. சுமார் ஒண்ணரை அல்லது இரண்டு கிலோ மீட்டர் தூரம் உள்ள வீட்டிற்கு இரவு ஒரு மணி வாக்கில் நடந்து போவது என்பது எப்படி இருக்கும். ஏற்கெனவே இந்தக் கச்சேரி தண்டனை போதாதா? இப்போது நடக்க வேறு சொல்கிறார்களே. இவர்களை எப்படிப் பழி வாங்கலாம்?. நமக்குத் தெரிந்த ஒரே ஆயுதத்தை எடுத்து விட வேண்டியதுதான். நண்பர்கள் முன்னால், அப்பா, அம்மா மானத்தை வாங்கி விடலாமென்று எண்ணி, ஓவென்று அழ ஆரம்பித்து, சீன் காட்டிப் பார்ப்பேன்.

ஏதோ ஒரு உலகத்தில் இருக்கும் அவர்கள் அசர மாட்டார்கள். அவர்கள் பாட்டுக்கு, அன்றைக்கு பாடப்பட்ட பாபனாசம் சிவனின் காபாலியை விமர்சனம் செய்து கொண்டு நடந்து கொண்டேயிருப்பார்கள். மோகன ஆலாபனை என்னம்மா இருந்தது என்று புளகாங்கிததுடன் கூறுவார்கள். அருமைச் செல்வனின் முகாரி எப்படி உள்ளது என்று யாரும் கண்டு கொள்ளக் கூட மாட்டார்கள். நம் விதி இதுதான் என்று மனதிற்குள் புலம்பியபடியே வீடு வந்து சேர்வேன். நான் எப்போது பெரியவனாவேன். இந்தத் தொல்லைகள் எல்லாம் இல்லாமல், பாபுவின்
மாமா போல எப்போது தனியாகவே வீட்டில் தூங்குவேன் என்று எண்ணியபடியே
இருப்பேன்.

அனிருத் ஓடி வந்து, "அப்பா, பாட ஆரம்பிக்கலாமா" ன்னு ஆதித்யா கேக்கறான்.

ஒஎஸ். காமெராவுக்கு பேட்டரி மாத்திட்டு வந்துடறேன். ஆரம்பிக்கச் சொல்லு.

வாதாபி கணபதிம் பஜே என்று ஹம்ஸத்வனியில் ஆரம்பிக்கிறான். கூட்டத்தினர் தலையை ஆட்டி இரசிக்கின்றனர். ஆ.. அந்த மூலையிலே உட்கார்ந்திருக்கும் நீலச் சட்டை கொட்டாவி விடுகின்றானே. ஆஹா. அனுபல்லவி ஆரம்பிப்பதற்குள் கண்ணை மூடி சாமியாட ஆரம்பித்து விட்டானே. கொஞ்சம் இருங்கோ ஸார். அந்தப் பையனை எழுப்பிட்டு வந்துடரேன்.

சூடான் அனுபவங்கள்


 பெரும்பாலும் யாரும் அதிகம் போகாத நாடு ஒன்றிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு. ஆம். ஆப்பிரிக்க நாடான சூடான் தான் அது. சூடானின் தலை நகரான கார்ட்டுமில் (Khartum) உள்ள எரிசக்தி மற்றும் சுரங்கத்துறையின் கீழ் வரும் சூடானீஸ் பெட்ரோலியம் கார்பொரேஷனில் இரண்டு மாச அசைன்மெண்ட். சூடான் ஒரு சர்வாதிகார நாடு. தீவிரவாதிகள் உலா வரும் பயங்கர நாடு என்று நண்பர்கள் மாற்றி மாற்றி எச்சரிக்கை. ஆனால் அங்கு போய்ப் பார்த்தால் நம்ம டெல்லி அல்லது ஹைதராபாத் போலத்தான் உள்ளது. படம் பார்த்துக் கதை சொல்லும் நண்பர்கள், கொஞ்சம் ஓவராகவே பீலா விட்டிருகிறார்கள் என்று புரிந்தது. சூடான் ஒன்பது நாடுகளால் சூழப்பட்ட பெரிய நாடு. எகிப்துக்குக் கீழே உள்ள நாடு என்று சொன்னால் எல்லாருக்கும் புரியும்.


கடந்த நாலு வருஷமாக, கச்சா எண்ணை (க்ரூட் ஆயில்) உற்பத்தியில் தன்னிறைவு மற்றும் ஏற்றுமதி என்று புஷ்டியாகவே வளர்ந்து வருகிறது சூடான். இந்த எண்ணைப் பணத்தை சூடான் உள் நாட்டுப் போருக்கு உபயோகிப்பதாக மேலை நாடுகள் குற்றச்சாட்டு. அதனால் கனடா நிறுவனமான தலிஸ்மான் இந்த எண்ணை உற்பத்தியில் இருந்து உன் பேச்சு கா என்று வெளியேறி விட்டது. ஆனால் மலேஷியாவும், சைனாவும் இன்னமும் தொகுதி போட்டுக் கொண்டு உட்கார்ந்துள்ளன. அண்ணன் எப்போ போவான், திண்ணை எப்போ கிடைக்கும் என்று கடந்த இரண்டு வருடங்களாக காத்திருந்த நம் நாட்டு ஒ.என்.ஜி.சி நிறுவனமும் தற்போது சுமார் 750 மில்லியன் டாலர் முதலீடு செய்து, கச்சா எண்ணையை இந்தியாவுக்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம் மேலும் பல முதலீடுகள் செய்ய இருப்பதால், அடுத்த சில வருடங்களில் பல இந்திய முகங்களை கார்ட்டுமில் பார்க்கலாம். இட்டிலி, வடை, சாம்பார் கிடைக்கக் கூடும் சாத்தியக்கூறுகளும் உள்ளன.


கார்ட்டூமிலுள்ள சூடான் மக்கள் பழகுவதற்கு நல்லவர்கள். இந்தியர்கள் பால் அன்பு கொண்டவர்கள். முப்பது நாப்பது வருடங்களுக்கு முன்பு இந்தியர்கள் இங்கு வந்து ஒரு பாலம் கட்டியுள்ளார்கள். நிறைய இடங்களில் வேப்ப மரமும் நட்டுள்ளார்கள். ஆனால் வேப்ப மர கல்யாணம் எல்லாம் சொல்லிக் கொடுக்கவில்லை. வழக்கம் போல எல்லா நாடுகளிலும் இருப்பது போல, நூறு முதல் இருனூறு குஜராத்திக் குடும்பங்கள் உள்ளன இங்கு. அவ்வப்போது சில ஹிந்தி சினிமா படங்களும் திரையிடப்படுகின்றன. ஓரிரண்டு இந்திய உணவு விடுதிகளும் உள்ளன. வெள்ளை நைல் நதியும்,நீல நைல் நதியும் சங்கமிக்கும் கூடுதுறை கார்ட்டுமாகும். நைல் நதியில்முதலைகள் நீந்திச்செல்வது அல்லது வெள்ளத்தில் அடித்துச் செல்வது சகஜமான காட்சியாகும்.
 
 ஓம்துர்மானில் உள்ள மார்க்கெட்டில் முதலை தோலினால் ஆன ஹாண்ட் பேக் கிடைக்கும். மகா முதலை ஹாண்ட் பேக் ஒன்று வாங்கினால், ஒரு சின்னக் குட்டி முதலை பர்ஸ் இலவசம். முதலை மூஞ்சியுடன் கிடைக்கும் இந்த ஹாண்ட் பேக்குகளை படித்துறையில் உட்கார்ந்து கொண்டு, சுடச்சுடச் செய்கிறார்களோ என்று ஒரு சந்தேகம்.


இந்த மக்கள் விரும்பி அருந்தும் பாரம்பரிய பானம் கர்கடே ஆகும். சிவப்புக் கலரில் சில்லென்று இருக்கும் இந்த கர்கடே எனக்கும் ரொம்பப் பிடிக்கும். உ.பா என்று எண்ணி விடாதீர்கள். செம்பருத்திப் பூவிலிருந்து தயாரிக்கப்பட்ட இந்தப் பானம் உடம்புக்கு மிகவும் நல்லதாம். தற்போது கர்கடே டிப் சாஷே ஆகவும் கிடைக்கிறது. அடுத்து அரதேப் என்ற புளியினால் ஆன பானத்தையும், அம்ருத் என்ற் கொய்யாப் பழச் சாறும் குடிக்கிறார்கள்.

ஃபூல் என்ற வேகவைத்த பீன்ஸினால் (mashed beans) ஆன ஒரு கொசப்பலான உணவு. சுமார் இரண்டு இன்ச் எண்ணையால் (கச்சா எண்ணை அல்ல) மூழ்கடிக்கப்பட்டிருக்கும். இதனை ஒரு தட்டில் வைத்து ஐந்து அல்லது ஆறு பேர், ப்ரெட்டுடன் தொட்டுக் கொண்டு சாப்பிடுவது சம்பிரதாய வழக்கம். நோ எச்சில்; நோ பத்து.

எண்ணை உற்பத்தி நன்றாக இருந்தாலும், தற்போது, மற்ற வளைகுடா நாடுகள் பக்கத்தில் கூட வர முடியாது சூடானால். வசதியானவர்கள் வளைகுடா நாடுகளுக்குச் சென்று விடுகிறார்கள். ப்ரென் ட்ரெய்னால் சம்பாதித்த பணத்தைக் கொண்டு நான் ரெஸிடெண்ட் சூடானீஸ் ஆடம்பர பங்களாக்கள் கட்டுகிறார்கள். இந்த பங்களாக்களில் காவல் புரியும் மால் ந்யுட்ரிஷியன்கள் சுட்டெரிக்கும் வெயிலில், வெளியிலே உட்கார்ந்திருந்து கருகிக் கொண்டிருப்பார்கள். போதாதென்று, அனேகமாக எல்லா பங்களாக்கள் வாசலிலும், டீசல் ஜெனெரேட்டர்கள் வேறு புகை கக்கியபடி இருக்ககும்.

உள்னாட்டுப் போர் போன்ற அரசியல் விவகாரங்கள் முடிந்து விட்டால், தனக்குள்ள எண்ணை வளத்தினால் வெகு விரைவில் வளைகுடா நாடுகளைப் போல சூடான் வளர்ந்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை. நான் விஜயம் செய்த போது எப்படி இருந்தது; இப்போ எப்படி ஆகி விட்டது என்று ஒரு நாள் ஓட்டலாமே. அமெரிக்கா, ஐரோப்பா அல்லது கீழை நாடுகளுக்கு மட்டுமே பிரயாணம் செய்ய எல்லோரும் விரும்பும் எண்ணும் இன்னாளில், எனக்கு இந்த சூடான் பயணம் ஒரு புது வித அனுபவம்தான்.

- சிமுலேஷன்

Embarrassment

முன்னொரு காலத்தில் விருப்பப்பட்ட திரைப்படங்களை மட்டும் தியேட்டரில் சென்று பார்ப்போம். ஆனால் தற்போது விரும்பியோ விரும்பாமலோ டிவி மூலம், திரைப்படங்கள்
வரவேற்பு அறைக்கு வந்து விடுகின்றது. சில பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது.

மும்பாயிலுள்ள எனது மாமா மாமிக்கு, கிரிஷ் என்று நாலு வயதில் பையன். மாமா மாமி டிவியில் சினிமா பார்க்கும்போது, கிரிஷ¤ம் கூட இருப்பான். படத்தில் கொஞ்சம் ஏடாகூடமாக சீன் வரும்போது, மாமி, பையனிடம், கிரிஷ் வா, சின்ன பாத்ரூம் போயிட்டு வந்துடலாம், என்று நைஸாக அவனை டிவி இருக்கும் இடத்திலிருந்து அப்புற்றப் படுத்துவது வழக்கம்.

ஒரு முறை டிவியில் சினிமா பார்த்துக் கொன்டி¢ருக்கும்போது, மாமியின் கஸின் வந்து விட்டாள். வெகு நாட்கள் கழித்து இருவரும் சந்திப்பதால் பேசிக்கொண்டேயிருந்தனர். டிவி? அது பாட்டுக்கு ஓடிக் கொண்டேயிருந்தது. கிரிஷ் பயல் மட்டும் சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறான். ஹீரோவும் ஹீரோயினும் நெருங்கி வரத் துடங்கினர். கிரிஷ் உடனே அம்மாவிடம் டிவியைக் காட்டி, "அம்மா, அம்மா, நான் வேண்டுமென்றால் சின்ன பாத்ரூம் போயிட்டு வந்து விடட்டுமா?" என்றான்.

Read Only Memory

Read Only Memory!!!

அஞ்சாறு வருஷங்ளுக்கு முன்பு, பொழுது போகவில்லையே; எங்கேயாவது போகலாம் எண்று எண்ணி பேப்பரில் என்கேஜ்மெண்ட் காலத்தைப் பார்த்தேன். சாந்தோம் அருகே உள்ள பெரிய அரங்கத்தில் ஒரு மெமரி நிறுவனம் தனது விளம்பர நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சி வித்தியசமாக ஆக இருக்கும் போல உள்ளதே என்று எண்ணி குடும்பத்துடன் சென்றோம்.நினைத்தபடியே நிகழ்ச்சி புதுமையாகத்தான் இருந்தது.

முதலில் சிறுமி ஷாமினி வந்து மேஜை மீதிருந்த சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பொருட்களை ஓரிரு நிமிடங்களே பார்த்து விட்டு அத்தனை பொருட்கள் பெயரையும் தப்பில்லாமல் கட கடவென்று ஒப்பித்தாள். அரங்கத்தில் அமர்ந்திருந்த அத்தனை பேரது கைதட்டலையும் வாங்கிச் சென்றாள். பின்பு ராமகிருஷ்ணன் என்ற ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்து இன்கம்டாக்ஸ் ஆக்ட்டின் க்ளாஸ் (clauses of income tax act) ஒவ்வொன்றையும் பிட்டுப் பிட்டு வைத்தார். இந்த வயதில் கூட மெமரி பயிற்சி சூப்பராக வேலை செய்கிறதே என்று எண்ணி வியந்தோம். இப்படியே இந்த மெமரி நிறுவனத்தில் பயிற்சி எடுத்திருந்த அனைவரும் வந்து
ஒவ்வொருவாக வந்து தத்தம் திறமைகளை காட்டிக் கலக்கிக் கொண்டிருந்தனர்.

அடுத்தபடியாக வந்தவர் குட்டியப்பன். சற்றே ஆர்த்த்டாக்ஸ் ஆக தோற்றம் அளித்த குட்டியப்பன் எடுத்துக் கொண்டது பகவத் கீதை. கீதையின் சருக்கங்கள் ஓவர் ஹெட் ப்ரொஜக்டரில் திரையிடப்பட்டது பார்வையளர்களுக்கு. பயபக்தியுடன் மேடை ஏறிய குட்டியப்பன் திரையைப் பார்க்காமலே, எந்த சருக்கத்தில் எந்த ச்லோகம் வருகின்றது என்பதை ஒரு பிழையும் இல்லாமல் சொல்லிக் கைதட்டல் பெற்றார். பின்னர் மேலும் அவர் பார்வையாளர்கள் கீதையிலிருந்து கேட்ட கேள்விகளுக்கும் தனது மெமொரி பவர் மூலம் பதிலளித்துக் கலக்கினார். மேடையை விட்டு கீழே இறங்கிய குட்டியப்பன் பெற்ற கைதட்டல் அடங்க வெகு நேரமாகியது.

அடுத்த நிகழ்ச்சியை அறிவிக்க வந்த அறிவிப்பாளர், ஒலிபெருக்கியில் அறிவித்தார், "Mr.Kuttiappan, You have forgotten and left your slippers on the stage. Please come and take them".

என்றான் முருகன்

சுஜாதா அவர்கள் விகடனில் "என்றான் முருகன்" என்ற தலைப்பில்
வாசகங்கள் எழுதக் கேட்டிருந்தார்.

வாத்யார் பிரசுரிக்காமல் விட்டு நான் எழுதிய வாசகங்கள் கீழே வருமாறு:-

1. அம்மா மாம்பழம் பிடிக்குமே உங்களுக்கு என்றான் முருகன் கனிவாக.

2. பாம்பைப் போன்ற தீவிரவதிகளை விஷம் வைத்துக் கொன்றால் கூடத் தவறில்லை என்றான் முருகன் நச்சென்று.

3. டிபன் பாக்ஸி¢ல் மிளகாய் பஜ்ஜியை வைத்தது யார் என்றான் முருகன் காரமாக.

4. உனக்காக ஸ்பெஷல் ஐஸ் க்ரீம் வாங்க வந்தி¢ருக்கேன் சாப்பிடு என்றான் முருகன் குழைவாக.

5. பில்டர் காபிதான் பெஸ்ட்; இல்லை இல்லை. இன்ஸ்டன்ட் காபிதான் பெஸ்ட் என்றான் முருகன் குழம்பியபடி.

6. ஸம்மர் வருது; வீடு முழுவதும் ஏ.ஸி பண்ண வேண்டும் என்றான் முருகன் கூலாக.

7. இந்த நாத்தம் பிடிச்ச ஊது பத்தியை யார் இங்கு வைச்சது என்றான் முருகன் காட்டமாக.

8. என்னமோ குடிக்கக் கொடுத்தான்; வயிற்று வலி தாங்க முடியிலை என்றான் முருகன் கடுப்பாக.

9. நாமே தோய்க்கறதை விட, வண்ணானுக்குப் போட்டால் துணிகள் நன்றாக வெளுக்குமே என்றான் முருகன் பளிச்சென்று.

10. உனக்கு எத்தனை சல்லடைதான் வாங்கித் தருவது என்றான் முருகன் சலிப்பாக.