Monday, September 12, 2011

கொலு வைப்பது எப்படி? - 03

முன்னேற்பாடுகள் – கொலு வைக்குமிடம்
முதன்முறையாகக் கொலு வைக்க இருப்பவர்கள், கொலு வைக்கும் இடத்தினைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். கொலு கிழக்குப் பார்த்து இருப்பது நல்லது என்றாலும், அபார்ட்மெண்ட்களில் எந்த இடம் வசதியோ அப்படித் தேர்வு செய்து கொள்ளலாம்.  முதலில் இந்த இடத்தையும், இந்த அறையியும், ஜன்னல்களையும்  ஒட்டடை அடித்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். விருந்தினர்கள் வரும் இந்த அறையிலுள்ள ஃபேன் முதலானவற்றை சோப் பவுடர் கொண்டு சுத்தம் செய்து பளிச்சென துடைக்கலாம்.  ட்யூப் லைட் மற்றும் அலங்கார விளக்குகளையும் அவற்றின் ஷேடுகளையும் கழற்றி சுத்தம் செய்ய வேண்டும். திரச்சீலைகள் இருந்தால், அவற்றையும் கழட்டித் துவைத்து அயர்ன் செய்து மாட்டலாம்.  கொலு வைக்கும் இடத்திற்கு மேல் தோரணங்கள் கட்டத் தோதாக, சீலிங்க்கிலிருந்து அரை அடி தூரத்தில் நான்கு புறங்களிலும் ஆணி அடித்து அவற்றின் குறுக்கு நெடுக்காக துருப் பிடிக்காத இருப்புக் கம்பிகளை கட்டி வைக்கலாம். இந்தக் கம்பிகள் தோரணங்கள் கட்டத் தோதாக இருக்கும்.

கொலுப்படிகள் வைக்கும் இடத்திற்கு மேலாக துணியால் ஒரு கூடாரம் அமைத்தால் எடுப்பாக இருக்கும். இதனை விதானம் அல்லது அஸ்மான்கிரி என்று சொல்லுவார்கள். இவை கிரி ட்ரேடர்ஸ் அல்லது காதி கிராமோத்யோக் பவன் போன்ற கடைகளில் கிடைக்கும். இவை விலை அதிகம் என்று எண்ணினீர்கள் என்றால் உங்கள் வீட்டிலுள்ள புதிதான, பயன்படுத்தாத பெட்-ஸ்பிரெட்டைக் கூடப் பயன்படுத்தலாம். இதனை கொலுப்படியின் மேலே கூடாரம் போலக் கட்ட வேண்டும். அங்கே மின் விசிறி இருந்தால் அதனக் கழட்டிவிட்டு, ஆஸ்மானகிரி துணியில் ஒரு சிறிய துளையிட்டு அதனைக் கம்பிகளில் கட்டி விட்டுப் பின்னர் மின் விசிறியினை மாட்டலாம். இந்தத் தோரணத்திற்கு அழகூட்ட ரசகுண்டுகள், சமிக்கி வேலைப்பாடுகள் அமைந்த தெர்மோகோல் பதக்கங்கள் ஆகியவற்றை ஆங்காங்கே மாடி வைக்கலாம்.  இதற்குப் பின்னர் சுவற்றில் ப்ரேம் செய்யப்பட்ட துணியில் வரையப்பட்ட ஓவியங்களையும் மாட்டி வைக்கலாம். கொலு வைக்குமிடத்தை நன்கு பெருக்கி, மெழுகி கோலமிடலாம்.

பொம்மைகளை பரணிலிருந்து பத்திரமாக இறக்கி ஒவ்வொரு பொம்மையாக எடுத்து துணி கொண்டு தூசி தட்ட வேண்டும். இதற்கு ஒரு பட்டை பெயிண்டிங் பிரஷ்ஷினையும் உபயோகப்படுத்தலாம். பீங்கான் பொம்மைகளை சோப் கொண்டு அலம்பலாம். பொம்மைகள் சிறிய அளவில் உடந்திருந்தால் பெவிகால், குவிக்-பிக்ஸ் அணை கொண்டு சரி செய்யலாம். பொம்மைகளின் வர்ணங்கள் மங்கி இருந்தால், பொம்மைகளின் தேவைக்கெற்ப 'எனாமல் பெயிண்டோ' அல்லது 'வாட்டர் கலரோ' கொண்டு வண்ணம் தீட்டலாம். முடியவில்லயென்றால், குறைந்த பட்சம், 'கோல்டன் கலர் பெயிண்ட்' வாங்கி வந்து பொம்மைகளின் கிரீடம், மற்றும் இதர ஆபரணங்களுக்கு மட்டும் தங்க நிறத்தில் வர்ணம் தீட்டி விட்டாலே போதுமானது. அவை புதிய பொம்மைகள் போல ஜொலிக்கும்.


நல்ல பொம்மை உடைந்து விட்டது, ஆனால் நம்மால் சரி செய்ய முடியாது என்று எண்ணும் பட்சத்தில் பொம்மை ரிப்பேர் செய்பவர்களிடம் கொடுத்துச் சரி செய்யலாம். மயிலாப்பூர் சித்திரக் குளம் அருகே பொம்மைகளை சரி செய்து வர்ணம் தீட்டி, புதிய பொம்மை போலவே செய்வதற்கென்று ஒரு பிரத்யேகக் கடை உள்ளது. பரமசிவம் என்பவர் இந்தத் தொழிலைப் பல வருடங்களாகாச் செய்து வருகின்றார். இந்த மாதிரிக் கடைகள் ஒரு சிலவே இருப்பதால், பொம்மைகளை ரிப்பேர் செய்ய நீங்கள் முந்திக் கொள்ள வேண்டியிருக்கும்.


தொடரும்…
- சிமுலேஷன்

கொலு வைப்பது எப்படி? - 02

முன்னேற்பாடுகள் – வாங்க வேண்டியவை
நாம் கொலு வைக்க வேண்டும் என்று தீர்மானம் செய்த பிறகு அதற்குத் தேவையான ஏற்பாடுகளை எவ்வளவுக்கெவ்வளவு முன்னதாகக் செய்து கொள்கின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. எந்த மாதிரி கொலு, எவ்வளவு பெரிய கொலு, எங்கே கொலு வைக்கப் பாகின்றோம் போன்ற விஷயங்களை முன்னதாகவே தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். இவற்றிக்குத் தேவையான பொருட்கள் என்னென்னவென்றும் பட்டியலிட்டுக் கொண்டு பத்துப் பதினைந்து நாட்கள் முன்பாகவே அவற்றை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது நவராத்திரி துவங்குவதற்கு முந்தைய சனி அல்லது ஞாயிற்றுக் கிழமைகளைல் இவற்றை வாங்கி வைத்து கொள்வதும் மற்றைய ஏற்பாடுகளை செய்து வைத்துக் கொள்வதும் நல்லது.

கொலுப்படிகள்
பாரம்பரியமாகக் கொலு வப்பவர்கள் வீடுகளில் கொலுப்படிகள் இருக்கும். மரத்தினாலோ அல்லது இரும்பினாலோ இந்தப் படிகள் செய்யப்பட்டிருக்கும். இவை போன்ற படிகள் இல்லாதவர்கள் வீட்டில் உள்ள பலகைகள், பெஞ்சுக்கள், மேஜைகள், புத்தகங்கள் உதவி கொண்டு படி கட்டுவார்கள். புதிதாகக் கொலு வைக்க இருப்பவர்கள், இவ்வாறு கஷ்டப்படாமல், புதிதாகக் கொலுப்படிகள் வாங்கிக் கொள்வது நல்லது. மரத்தில் வேண்டுமென்றால் ஆசாரியிடம் ஆர்டர் கொடுத்து செய்யச் சொல்ல வேண்டும். ஆனால் மரப்படிகளைக் கையாள்வது கடினம். மேலும் விலையும் அதிகம்.


எனவே எளிதில் கழட்டி மாட்டக் கூடிய ஸ்டீல் ஸ்லாட்டட் ஆங்கிள்களால் அமைந்த இரும்ப்புப் படியே சிறந்தது. இவை ஹார்ட்வேர் கடைகளிலும், பாத்திரக் கடைகளிலும் கிடைக்கும். எண்ணிக்கை குறைந்த படிகள் வைப்பவர்களும்,   குறைவான பொம்மைகள் வைப்பவர்களும், மெல்லிய தகடுகள் கொண்ட் விலை குறைந்த படிகளை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் இந்த மெல்லிய தகடுகள் மூலம் அதிகப்படியான படிகள் வைத்தால் அவற்றின் மீது நாம் ஏறி பொம்மகளை வைக்கும் போது இந்த மெல்ல்லிய தகடுகள கண்டிப்பாக வளைந்து விடும். எனவே நிறைய கனமான பொம்மைகளை வைக்க எண்ணினாலோ, அல்லது அதிகப் படிகள் வைக்க எண்ணினாலோ, சற்றெ அதிக ‘கேஜ்’ உள்ள தடிமனான தகடுகள் கொண்ட ஸ்லாட்டட் ஆங்கிள் படிகள் வாங்குவது நல்லது. இஅவை சற்றே விலை கூட இருந்தாலும் நீண்ட காலப் பயன்பாட்டிற்கு நல்லது.


தற்போது ப்ளாஸ்ட்டிக்கிலும் கொலுப் படிகள் கிடைக்கின்றன. இவை எவ்வளவு வலுவானவை என்பது தெரியவில்லை. ஆனால், எளிதில் பூட்டி மாட்ட்டவும், கழட்டிக் கையாள்வதற்கும் வசதியானவையாக இருக்கலாம். அடிக்கடி வேலை மாற்றல் காரணமாக வீடு மாறுபவர்களுக்கு இவை தோதாக இருக்கும்.

பொம்மைகள்



புதிதாகக் கொலு வைப்பவர்கள் கண்டிப்பாக பொம்மைகள் வாங்க வேண்டும். ஏற்கெனவே கொலு வைப்பவர்கள் கூட வருடா வருடம் புதிது, புதிதாகப் பொம்மகள் வாங்க ஆசைப்படுவார்கள். இப்போது எந்த மாதிரி கொலு வைக்கப் போகின்றோம், அதற்கு எப்படிப்பட்ட பொம்மைகள் வேண்டுமென்றும் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். ஒரு படியில் வைக்கப்படும் பொம்மைகள், ஏறுமாறான உயரங்களில் இல்லாமல் இருந்தால் பார்வைக்கு அழகாக இருக்காது. எனவே எந்த அளவில் பொம்மைகள் வாங்க வேண்டுமென்று நன்கு திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.



சென்னை போன்ற நகரங்களிம் கொலுப் பொம்மைகள் வாங்கப் பல இடங்கள் உள்ளன. முக்கியமாக மயிலாப்பூரில் உள்ள வடக்கு மாடவீதி, மற்றும் குறளகம், காதி கிராமோத்யோக பவன், பூம்புகார் கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களில் பொம்மைகள் வாங்கலாம். மற்றும் சில தனிநபர்கள் தங்கள் வீடுகளில் நவராத்திரி காலங்களில் கல்கத்தா பொம்மைகள் மற்றும் பண்ருட்டி பொம்மைகளை விற்பனை செய்கின்றார்கள். கடை வாடகை போன்ற இதர செலவுகள் இல்லாததால் இவர்களிடம் கடைகளை விட சற்றுக் குறைந்த  விலையில் பொம்மைகளை எதிர்பார்க்கலாம். தற்காலத்தில் மண் பொம்மைகள் தவிர, பேப்பர் மேஷ் பொம்மைகள் நேர்த்தியான அங்க அமைப்புகளுடனும், கண்ணைக் கவரும் வண்ணங்களுடனும், கையாள்வத்ற்கு எளிதாக எடை குறைவாகவும் கிடைக்கின்றன.  சில பொம்மைகள் பஞ்சலோக சிலைகள் போலவே உள்ளன. பார்த்தால் உலோகத்திலான சிலைகளுக்கும் அவற்றிற்கும் வித்தியாசமே தெரியாது. வெளிநாட்டில் உள்ளவர்கள் வாங்கும் வண்ணம் ஆன்-லைனில் பொம்மைகள் வாங்குவதற்கும் தற்காலத்தில் வசதிகள் உள்ளன.

தோரணங்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள்


மற்ற பண்டிகைகள் போல மாவிலைத் தோரணம், பனையோலத் தோரணம்  ஆகியவற்றிக் கட்டினாலும், கொலுவிற்கு மேலும் பல அலங்காரங்கள செய்ய வேண்டும். அதற்காக ப்ளாஸ்டிக் மாவிலைத் தோரணங்கள், வீட்டு வாசலில் கட்ட அலங்காரத் தோரணங்கள், கொலு இருக்கும் அறையை அலங்கரிக்க தொம்பைகள், கலர் காகிதத் தோரணங்கள, ஜரிகை, சமிக்கி வேலைப்பாடு கொண்ட தோரணங்கள் ஆகியவையும் தேவைப்படலாம். உங்கள் வீட்டிற்கு என்ன தேவையோ, உங்கள் கொலுவிற்கு எவை அழகாகப் பொருந்தி வருமோ அவற்றை மட்டும் வாங்கிக் கொள்ளலாம். அனாவசியமாக வாங்கிக் குவித்துக் குப்பை சேர்க்கக் கூடாது.

பரிசுப் பொருட்கள் மற்றும் இன்ன பிற
கொலுவிற்கு வரும் விருந்தினர்களுக்கு அந்தக் காலத்தில் வெத்தில, பாக்கு, தேங்காய், மஞ்சள் தவிர சோப்பு, சீப்பு, கண்ணாடி, ரவிக்கைத் துணி போன்ற பொருட்களைப் பரிசாகத் தருபது வழக்கம். ஆனால் இந்தக் காலத்தில் பெரும்பாலானோர்க்கு இவையெல்லாம் தேவைப்படாது. எனவே இப்போது பலரும் விருந்தினர்களுக்கு உபயோகமான பொருட்களை தருகின்றனர். இந்த வகையில் இன்றைய நாட்களில் ப்ளாஸ்டிக் டப்பா, தட்டு, கூடை, எவர்சில்வர் தட்டு, கிண்ணம், பூக்கூடை, கைப்பை, காதணிகள், வேலைப்பாடமைந்த பர்ஸ் எனப் பலவகை பொருட்களையும் பரிசாக அளிக்கின்றனர். எனவே என்ன பொருட்களை எவ்வளவு வாங்க வேண்டுமோ அவற்றைத் திட்டமிட்டுப் பட்டியலிட்டு முன்னதாகவே வாங்கி வைத்துக் கொண்டால் நேர விரயத்தினைத் தவிர்க்கலாம்.

பரிசுப் பொருட்கள தவிர, சுண்டல் முதலானவற்றைப் பேக் பண்ணிக் கொடுக்க பாலிதீன் பை (ஜிப்லாக்), அல்லது அலுமினியும் ஃபாயிலால் செய்யப்பட்ட டப்பாக்கள் இவையும்  தேவையான அளவுக்கு வாங்கி வைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். நவராத்திரி சமயத்தில் வந்திருக்கும் ஸ்பெஷல் கடைகளிலோ அல்லது மயிலாப்பூர், பாரிமுனை பகுதிகளில் அமைந்துள்ள கடைகளிலோ இவற்றை வாங்கலாம்.
தொடரும்…
- சிமுலேஷன்

கொலு வைப்பது எப்படி? - 01


நவராத்திரிப் பண்டிகை நம் நாடு முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைக்களில் ஒன்று. குறிப்பாக இந்தப் பண்டிகை வங்காளம், மைசூர் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. மைசூர் போன்ற நகரங்களில் “தசரா” என்ற பெயரில் அரசாங்கத்தின் ஆதரவுடன் பிரம்மாண்டமான முறையில் கொண்டாடப்படும். இந்தப் பண்டிகையின்போது தமிழகத்தில் பலரும் பொம்மைக் கொலு வைப்பது வழக்கம். இதே போல ஜப்பான் நாட்டினரும் பொம்மைகளை வைத்து விழா எடுப்பதாக அறியப்படுகின்றது.

நவராத்திரிப் பண்டிகைக்கும்  மற்ற பண்டிகைக்களுக்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளன். மற்ற பண்டிககள் ஒன்று அல்லது இரண்டு நாடகள்தான் கொண்டாடப்ப்டும். ஆனால் நவராத்திரியோ ஒன்பது அல்லது பத்து நாட்கள தொடர்ச்சியாக விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். மற்ற பண்டிகைகளில் ஆண்கள் அல்லது பெண்கள் மட்டுமே பெரும் பங்கு வகிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் நவராத்திரிப் பண்டிகையில் குடும்பத்தில் உள்ள ஆண்கள். பெண்கள், குழந்தைகள் என அனைவருமே பங்கு கொள்ளூம் வாய்ப்பு உள்ளது.

அந்தக் காலத்தில் நவராத்திரிப் பண்டிகையானது பதினான்கு நாட்கள் கூட விமரிசையாகக் கொண்டாடப்படும். வீடு நிறையக் கொலு வைத்து ஊரில் உள்ள அனைவரையும் தாம்பூலம் வாங்கிக் கொள்ள அழைப்பார்கள். மைசூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் போன்ற சமஸ்தானங்களில் நவராத்திரி பிரம்மாண்டமான முறையில் கொண்டாடப்பட்டு வந்தன. பொதுவாகக் கலைகள் எங்கு கொண்டாடப்பட்டதோ அங்கெல்லாம் நவராத்திரிக்குப் பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கொலு வைப்பதில் வீட்டுப் பெண்களும் ஆண்களும் மும்முரமாக இருக்க, கொலுவுக்கு அக்கப் பக்கத்தில் இருப்பவர்களை அழைக்க வீட்டில் உள்ள சிறுவர்கள், சிறுமியர்கள் செல்வார்கள். அவர்கள் கிருஷ்ணர், ராதை போன்ற வேடமிட்டுச் சென்று அழைப்பதும் வழக்கம்.

பாரம்பரியமாகக் கொலு வைப்பவர்கள் தங்கள் முன்னோர்களின் வழியிலேயே கொலு வைப்பார்கள. அப்படியல்லாமல் சிலருக்கு புதிதாகக் கொலு வைக்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுவதுண்டு. ஆனால் சாஸ்திரம், சம்பிரதாயம் அனுமதியளிக்குமோ என்று குழம்புவார்கள். ஒரு நல்ல விஷயத்தைத் துவக்குவத்தில் தயக்கமே தேவையில்லை. இது தவிர, தற்காலத்தில் பெரும்பாலான பெண்களும் வேலைக்குச் செல்லும் நிலையில், கொலு வைப்பது என்பது சற்று சிக்கல் நிறைந்தது தான். ஆனால் மனம் இருந்தால் மார்க்கமுண்டு. சரியான திட்டமிடலுடன், குடும்பத்தினரின் ஒத்துழப்பும் கிடைக்கக் கொலு வைப்பது என்பது எளிதான வேலையாகும். அதற்கான எளிய முயற்சியே இந்தப் பதிவுத் தொடராகும்.

தொடரும்…
- சிமுலேஷன்
-